அம்பேத்கரை சுட்டிக்காட்டி ஆளுநருக்கு குட்டு.. ஒரு மாதம் தான் கெடு : உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!
Author: Udayachandran RadhaKrishnan8 April 2025, 1:02 pm
சென்னை, பாரதியார் உள்ளிட்ட பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களின் பதவிக்காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, புதிய துணைவேந்தர்களை நியமிக்க 2023 ஆம் ஆண்டு தமிழக அரசு ஒரு தேடுதல் குழுவை அமைத்திருந்தது.
அந்தக் குழுவில் பல்கலை மானியக் குழுவின் உறுப்பினரையும் சேர்க்க வேண்டும் என்று கவர்னர் ரவி தமிழக அரசுக்கு அறிவுறுத்தியிருந்தார். அதிலிருந்து கவர்னருக்கும் தமிழக அரசுக்கும் இடையே கருத்து வேறுபாடு நீடித்து வருகிறது.
தமிழக அரசு சட்டசபையில் நிறைவேற்றும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் தாமதப்படுத்துவதாகக் கூறி, கவர்னருக்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. இந்த வழக்கில் அனைத்து தரப்பு விசாரணைகளும் முடிந்தன.
இதையும் படியுங்க: கோவையில் பயங்கரம்.. முன்விரோதத்தால் ஏற்பட்ட மோதல் : இளைஞர் குத்திக் கொலை!
உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் பர்திவாலா மற்றும் மகாதேவன் அடங்கிய அமர்வு இவ்வழக்கை விசாரித்தது. இன்று, உச்சநீதிமன்ற நீதிபதிகள் பர்திவாலா மற்றும் மகாதேவன் அடங்கிய அமர்வு இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கியது.
அந்தத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதாவது, தமிழக அரசின் 10 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் நிறுத்தி வைத்திருப்பது சட்டப்படி தவறு.
அரசியல் அமைப்பு சட்டம் 200ன்படி ஆளுநர் முடிவெடுக்க வேண்டும், சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் மீதான ஆளுநரின் செயல் ஏற்றுக்கொள்ள முடியாது, மசோதாவை ஜனாதிபதிக்கு ஆளுநர் அனுப்பியது தவறு.
பஞ்சாப் ஆளுநர் வழக்கல் உச்சநீதிமன்றம் ஏற்கனவே தெளிவான தீர்ப்பை வழங்கியுள்ளது. மசோதாவை பொறுத்தவரை ஆளுநருக்கு 3 வாய்ப்புள்ளது. ஒப்புதல் அளிக்க வேண்டும், நிறுத்தி வைக்க வேண்டும் அல்லது ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
ஆளுநருக்கு வீட்டோ அதிகாரம் இல்லை, தான் நிறுத்தி வைத்திருக்கும் மசோதா செல்லாது என கூற ஆளுநர் எந்த உரிமையும் இல்லை, ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்த முடியாது. ஒரு மாதம் தான் ஆளுநருக்கு கெடு, அமைச்சரவை ஆலோசனையின் படி ஆளுநர் செயல்பட வேண்டும்.
தன்னிச்சையாக ஆளுநர் செயல்பட முடியாது, மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பது குறித்து ஆளுநர் உரிய நேரத்தில் முடிவு செய்ய வேண்டும் என நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர்.
மேலும் நீதிபத பர்திவாலா , அம்பேத்கரை சுட்டிக்காட்டி கூறும்போது, அரசியல் சட்டம் நல்லதாக இருந்தாலும், அதை அமல் செய்பவர்கள் நல்லவர்களாக இல்லாவிட்டால் அது மோசமான நிலையையே ஏற்படுத்தும் என கூறினார்,