மாணவிகள் முன் செய்யக்கூடாத செயல்.. அரசுப் பள்ளி ஆசிரியர் போக்சோவில் கைது!
Author: Hariharasudhan11 February 2025, 2:00 pm
திருப்பூரில், மாணவிகள் முன்பு ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக அரசுப் பள்ளி ஆசிரியர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருப்பூர்: திருப்பூர் மாவட்ட தெற்கு காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில், 7ஆம் வகுப்பு கணித ஆசிரியர் சுந்தரவடிவேலு, சில மாணவிகளிடம் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து, இது தொடர்பான புகார் சைல்டு ஹெல்ப்லைன் எண் 1098க்கு சென்றுள்ளது. இதனையடுத்து, பள்ளிக்கல்வித் துறையினர், மாவட்டக் குழந்தைகள் நலக்குழு அலுவலர் ரியாஸ் அகமது பாட்ஷா, மாவட்டக் குழந்தைகள் நலக் குழு தலைவர் ஆறுச்சாமி மற்றும் திருப்பூர் தெற்கு போலீசார், நேற்று பிற்பகல் பள்ளிக்குச் சென்று விசாரித்துள்ளனர்.
அப்போது, பெற்றோர் மற்றும் புகார் அளித்த வகுப்பு மாணவிகளிடம் தனித்தனியாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட குழந்தைகள் நலக்குழு அலுவலர் ரியாஸ் அகமது பாட்ஷா, “7ஆம் வகுப்பு ஆசிரியர் ஒருவர், குழந்தைகளிடம் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக புகார் வந்தது.

இது தொடர்பாக அனைவரிடமும் தனித்தனியாக விசாரிக்கப்பட்டு, அவர்களிடம் எழுத்துப்பூர்வமாக புகார்கள் பெறப்பட்டுள்ளன. இவை அனைத்தும் குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அதன் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பள்ளி விடுதி கழிவறையில் மாணவி மர்ம மரணம்.. உறவினர்கள் பகீர் குற்றச்சாட்டு!
இதனைத் தொடர்ந்து, கணித ஆசிரியர் சுந்தரவடிவேலு மீது மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும், ஆசிரியர் சுந்தர வடிவேலு தனது சொந்த ஊரான புதுக்கோட்டைக்குச் சென்றது உறுதி செய்யப்பட்ட நிலையில், அவரை தேடிச் சென்ற அதிகாரிகள், அங்கு அவரை கைது செய்து அழைத்துவந்து விசாரணை நடத்தினர். இதன் பின்னர் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளார்.