திருவாதிரை விரதம் இருந்த பெண்கள்.. ஆருத்ரா தரிசனத்தில் காட்சியறித்த சிவன் : திரளான பக்தர்கள் பங்கேற்பு!
Author: Udayachandran RadhaKrishnan27 December 2023, 8:29 am
திருவாதிரை விரதம் இருந்த பெண்கள்.. ஆருத்ரா தரிசனத்தில் காட்சியறித்த சிவன் : திரளான பக்தர்கள் பங்கேற்பு!
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே பிச்சாண்டார் கோயில் ஊராட்சியில் உள்ள உத்தமர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழாவை முன்னிட்டு நடராஜர் மற்றும் சிவகாமசுந்தரிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
மார்கழி மாதத்தில் வரும் திருவாதிரை நட்சத்திரத்தன்று கடைபிடிக்கப்படும் சிவனுக்குரிய முக்கியமான விரதம் திருவாதிரை விரதம். இது தமிழகத்தில் பெண்களால் கடைபிடிக்கப்படும் விரதமாகும்.
இந்த நாளில் சிதம்பரம்,உத்திரகோசமங்கையில் உள்ள நடராஜ பெருமானுக்கு நடத்தப்படும் அபிஷேகம் மிகவும் புகழ்பெற்றதாகும். பெருமானுக்குரிய முக்கிய விரத நாட்களில் ஒன்று ஆருத்ரா தரிசன நாளாகும்.
மார்கழி மாதத்தில் திருவாதிரை நட்சத்திரமும், பெளர்ணமி திதியும் இணைந்து வரும் நாளையே ஆருத்ரா தரிசன நாளாக கொண்டாடுகிறோம். 27 நட்சத்திரங்களில் சிவனுக்குரிய திருவாதிரை மற்றும் பெருமாளுக்குரிய திருவோணம் ஆகிய இரண்டு நட்சத்திரங்களுக்கு மட்டுமே ‘திரு’ என்ற அடைமொழி உண்டு.
ஆருத்ரா என்பது சமஸ்கிருத சொல்லாகும். இதற்கு ஆதிரை என்று பொருள். திருவாதிரை நட்சத்திரத்தன்று சிவ பெருமானுக்கு நடத்தப்படும் உற்சவத்தையே ஆருத்ரா தரிசனம் என்கிறோம்.
இந்நிலையில் மும்மூர்த்திகளும் முப்பெரும் தேவிகளும் குடிகொண்டிருக்கும் அருள்மிகு உத்தமர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழாவை முன்னிட்டு நடராஜர் மற்றும் சிவகாமசுந்தரிக்கு 54 வகையான திரவிய பொருட்கள், 22 மலர்கள், மற்றும் புனிதத் தீர்த்தம் வெட்டிவேர் சந்தனக்கட்டை உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.இதில் திரலான பக்தர்கள் கலந்து கொண்டனர்.