மனைவிக்கு பயந்து வங்கியில் ரூ.15 லட்சம் கொள்ளை.. ஸ்கூட்டரால் சிக்கிய கணவர்!
Author: Hariharasudhan18 February 2025, 9:58 am
கேரளாவில், மனைவிக்கு பயந்து கடனை அடைக்க வங்கியில் கொள்ளையடித்த நபரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
திருவனந்தபுரம்: கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டம், போத்தா பகுதியில் உள்ள ஃபெடரல் வங்கிக் கிளையில், கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி, பிற்பகல் 2.15 மணியளவில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர் ஒருவர், ஸ்கூட்டரில் நோட்டம் விட்டபடி வங்கிக்கு வந்துள்ளார்.
அப்போது, ஹெல்மெட், ஜாக்கெட், கையுறை மற்றும் முதுகில் ஒரு பை எனத் தயாராக வந்திருந்த அவர் வங்கிக்குள் நுழைந்த நேரம் உணவு இடைவேளை என்பதால், பலரும் சாப்பிடுவதற்காகச் சென்றிருந்தனர். இதனால் வங்கியிலும் கூட்டம் குறைவாக இருந்துள்ளது.
இதனை பயன்படுத்திக் கொண்ட அந்த நபர், பணியில் இருந்த இரண்டு ஊழியர்களை கத்திமுனையில் மிரட்டி, அவர்களைக் கழிப்பறைக்குள் தள்ளி பூட்டியுள்ளார். பின்னர், அங்கிருந்த நாற்காலியைப் பயன்படுத்தி, பணம் இருந்த கவுண்டரின் கண்ணாடி அறையை உடைத்து, 15 லட்சம் ரூபாய் பணத்தை எடுத்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளார்.

முக்கியமாக, இந்த முழுச் சம்பவத்தையும் அவர் இரண்டரை நிமிடங்களில் நடத்தி முடித்திருக்கிறார். பின்னர், இதுகுறித்து சாலக்குடி போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அங்கிருந்த சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி ஆய்வு செய்தனர்.
ஆனால், அவர் ஹெல்மெட் அணிந்திருந்ததால் யார் என்பது தெரியாமல் இருந்து வந்தது. இருப்பினும், பணத்துடன் வெளியேறிய அந்த நபர், தனது ஸ்கூட்டரில் தப்பிச் செல்லும் காட்சிகள் சிசிடிவியில் பதிவான நிலையில், அந்த ஸ்கூட்டரின் பதிவெண்ணும் போலி என்பது விசாரணையில் தெரியவந்தது.
இந்த நிலையில், கொள்ளைக்கு பயன்படுத்தப்பட்ட அந்த ஸ்கூட்டரின் நடமாட்டத்தைக் கண்காணிக்க, வங்கிக் கிளைக்கு எதிரே உள்ள தேவாலயத்திற்கு யாரெல்லாம் இந்த வகை ஸ்கூட்டரில் ஏற்கனவே வந்து சென்றிருக்கிறார்கள் என்பதை போலீசார் சிசிடிவி காட்சிகளைக் கொண்டு ஆய்வு செய்யத் தொடங்கினர்.
அப்போது ரிஜோ ஆண்டனி என்பவர், அடிக்கடி அந்த தேவாலயத்திற்கு அதே ஸ்கூட்டரில் வந்து சென்றது தெரிய வந்துள்ளது. எனவே, ரிஜோ ஆண்டனியைப் பிடித்த போலீசார், அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். இதில், வங்கிக்கு எதிரே உள்ள தேவாலயத்திற்குச் செல்வதைப் போல, வங்கியின் நடவடிக்கைகளைக் தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளார் ரிஜோ.
எனவே, வாடிக்கையாளர்கள் குறைவாக இருக்கும் நேரத்தைக் கணக்கிட்டு, அந்த நேரத்தில் கொள்ளையடிக்கத் திட்டமிட்டிருக்கிறார். அதற்காக போலி வாகன எண்ணை உருவாக்கி, தன் ஸ்கூட்டருக்கு பொருத்தி உள்ளார். மேலும், வேலையில்லாமல் சுற்றி வந்த ரிஜோ ஆண்டனி, வெளிநாட்டில் பணிபுரியும் அவரது மனைவி அனுப்பிய பணத்தில் வாழ்ந்து வந்திருக்கிறார்.
இதையும் படிங்க: இதுக்குப் பிறகு இப்படியொரு படம் பண்ண முடியுமானு தெரில.. வெற்றிமாறன் அப்செட்!
இதனை ஆடம்பரமாக செலவு செய்து வந்ததால், 10 லட்சம் ரூபாய் வரை கடனாகியிருக்கிறது. இதனிடையே, அடுத்த மாதம் அவரது மனைவி வீடு திரும்பவிருந்த நிலையில், மனைவிக்கு தெரிந்து விடக்கூடாது என்ற பயத்தில், அனைத்து கடனையும் அடைத்துவிட வேண்டும் என முடிவு செய்துள்ளார்.
எனவே, அதற்காக கடந்த இரண்டு வாரங்களாகத் திட்டமிட்டு இந்தக் கொள்ளையை அரங்கேற்றியிருக்கிறார் ரிஜோ ஆண்டனி. மேலும், வங்கி கேஷ் கவுண்டரில் 45 லட்சம் ரூபாய் இருந்ததாகவும், தனக்குத் தேவை 15 லட்சம் என்பதால், அதை மட்டுமே எடுத்துச் சென்றதாகவும் ரிஜோ கூறியுள்ளார்.