ஒரே நாளில் இரு பெண்களை மனைவியாக்கிய கணவர்.. தீராத சந்தேகத்தால் நடந்த விபரீதம்!
Author: Udayachandran RadhaKrishnan19 March 2025, 2:23 pm
ஓசூர் அருகே கர்நாடக மாநிலம் ஆனெக்கல் தாலுகாவிற்கு உட்பட்ட ராசமான ஹள்ளி பகுதியை சேர்ந்தவர் பாபு (32) இவருக்கு அனிதா மற்றும் சுஷ்மிதா என 2 மனைவிகளும் 4 குழந்தைகளும் உள்ளனர்.
இதில் அனிதா மைசூர் அருகே உள்ள சிக்க மார்க்கெட் பகுதியை சேர்ந்தவர். அனிதா மற்றும் சுஷ்மிதாவை பாபு கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு ஒரே நாளில் தாலி கட்டி திருமணம் செய்து வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.
பாபுவிற்கு அனிதா மீது சந்தேகம் ஏற்பட்டு அடிக்கடி தகறாரு செய்து வந்துள்ளார். கணவன் மனைவி இடையே தகறாரு ஏற்படும் போது அனிதா உறவினர்கள் வீட்டிற்கு செல்வது வழக்கம், அதுபோலவே தகராறு ஏற்பட்டு கடந்த மாதத்திற்கு முன்பு போலீசார் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தி மனைவி பாபு வீட்டிற்கு வந்துள்ளார்.

இந்த நிலையில் மீண்டும் நேற்று பாபு அனிதாவுடன் சண்டையிட்டுள்ளார். அப்போது அவர் வீட்டில் இருந்த ராகி களி கிண்டும் கோலில் (தொண்ணை) அனிதாவை சரமாரியாக அடித்து கொலை செய்துள்ளார்.
நேற்று மதியம் செய்த கொலை குறித்து யாருக்கும் தெரியாமல் மறைத்த அவர் பின்னர் அதிகாலையில் அருகில் உள்ள பொது மக்களிடம் கூறியுள்ளார். இந்த சம்பவம் குறித்து அத்திப்பள்ளி போலீசாருக்கு பகுதியினர் தகவல் அளித்துள்ளனர்.

அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உயிரிலிருந்து கிடந்த அனிதாவின் உடலை கைப்பற்றி அத்திப்பள்ளி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அதனைத் தொடர்ந்து பாபுவை கைது செய்த போலீசார் கொலை குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
