எம்.பி. பதவிக்கு குறி வைத்த கமல்ஹாசன்… மக்கள் நீதி மய்யம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!
Author: Udayachandran RadhaKrishnan23 July 2023, 7:29 pm
கோவையில் எம்பி பதவிக்கு போட்டியிடும் கமல்? மக்கள் நீதி மய்யம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!
மக்கள் நீதி மய்யம் கட்சியும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு “மக்களோடு மய்யம்” என்ற நிகழ்வை முன்னெடுத்துள்ளனர். இதில் அக்கட்சியினர் நேரடியாக மக்களை வீடு வீடாகச் சென்று சந்தித்து அடிப்படை குறைகள் மற்றும் தேவைகளை அறிந்து அதனை வாக்குறுதியாக அளிக்க உள்ளனர். இது தமிழகம் முழுவதும் நடைபெற உள்ளது.
அதன்படி மக்களோடு மய்யம் நிகழ்வை கோவை மாவட்ட மக்கள் நீதி மய்யம் கட்சியினர் இன்று முதல் துவங்கி உள்ளனர். இதன் முதல் துவக்க நிகழ்வு அக்கட்சியின் தலைவர் கமலஹாசன் போட்டியிட்ட கோவை தெற்கு தொகுதியில் துவங்கி உள்ளது. முதல் நாள் நிகழ்வு புலியகுளம் பெரியார் நகரில் நடைபெற்றது.
இதில் அக்கட்சியின் மாநில துணை தலைவர் தங்கவேலு, கொள்கை பரப்பு செயலாளர் அர்ஜுன் உட்பட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டு அப்பகுதி மக்களை நேரடியாக சந்தித்து குறைகள் மற்றும் தேவைகளை கேட்டறிந்தனர். இந்நிகழ்வில் செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நீதி மய்யத்தின் துணை தலைவர் தங்கவேலு, மக்களோடு மய்யம் நிகழ்வு தமிழ்நாடு முழுவதும் நடைபெற உள்ளதாக தெரிவித்தார்.
கட்சியின் தலைவர் எம்பி தேர்தலில் நிச்சயமாக போட்டியிடுகிறார், அது கோவையாகவும் இருக்கலாம் மற்ற இடங்களாகவும் இருக்கலாம். அவர் விருப்பப்பட்டால் இங்கு நிற்பதற்கான வாய்ப்புகள் உள்ளது என தெரிவித்தார். மேலும் பொதுமக்களின் அடிப்படை குறைகளை மாவட்ட ஆட்சியரிடம் வாரம் தோறும் மனுக்களாக அளித்து வருவதாகவும் தெரிவித்தார்.