அண்ணாமலையார் கோவிலில் நாளை கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றம்… வெகுவிமர்சையாக நடந்த முருகர் தேரின் வெள்ளோட்டம்…!!

Author: Babu Lakshmanan
16 November 2023, 9:21 am

திருக்கார்த்திகை தீபத் திருவிழாயொட்டி மாட வீதியில் புதியதாக போடப்பட்ட கான்கிரீட் சிமெண்ட் சாலையின் தரத்தை உறுதி செய்யும் வகையில் முருகர் தேர் வெள்ளோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலின் திருக்கார்த்திகை தீபத் திருவிழா நாளை 17ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது.

இந்நிலையில், அண்ணாமலையார் கோவிலின் நான்கு மாட வீதியில் 15 கோடி ரூபாய் மதிப்பில் புதியதாக காங்கிரீட் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று தற்போது அந்த பணிகள் நிறைவு பெற்றது. குறிப்பாக திருக்கார்த்திகை தீபத் திருவிழாவில் முக்கிய திருவிழாவான 7ம் நாள் விநாயகர், முருகர், அண்ணாமலையார் உடனுறை உண்ணாமுலை அம்மன், பராசக்தி அம்மன் மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்திகள் மர தேரில் எழுந்தருளி மாட வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்கள்.

புதியதாக போடப்பட்ட கான்கிரீட் சிமெண்ட் சாலையின் தரத்தை உறுதி செய்யும் வகையில், தற்போது முருகர் தேர் வெள்ளோட்டம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் முருகர் தேரின் வடத்தை பிடித்து நான்கு மாட வீதியில் உலா வந்து அண்ணாமலையாரை தரிசனம் செய்து வழிபட்டனர்.

மேலும், இன்று இரவு விநாயகர் உற்சவம் நடைபெற்று நாளை அதிகாலை அண்ணாமலையார் கோவிலில் உள்ள தங்க கொடி மரத்தில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றம் நடைபெறும்.

  • dancer girl fainted in suriya 45 shooting spot லோகேஷ் கனகராஜை பார்த்து சூடு போட்டுக்கொண்ட ஆர்ஜே பாலாஜி! திடீரென மயங்கி விழுந்த பெண்?