மின் கட்டண உயர்வை கண்டித்து தொழிற்கூடங்கள் கதவடைப்பு போராட்டம் : பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு!!
Author: Udayachandran RadhaKrishnan25 November 2022, 2:48 pm
மின் கட்டண உயர்வை கண்டித்து தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பான போசியாவின் 18கூட்டமைப்புக்கள் வேலை நிறுத்தம் மற்றும் உண்ணாவிரத போராட்த்தில் ஈடுபட்டனர்.
சிறுகுறு தொழில் நிறுவனங்களுக்கு பீக்அவர் கட்டணத்தை நீக்க வேண்டும்,நிலைக்கட்டணம் தொடர்பாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் விதமாக கோவை மாவட்டத்தில் சிறுகுறு தொழில் நிறுவனங்களான தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பான போசியா சார்பில் 18 கூட்டமைப்புகளுடன் இணைந்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்ந்து கோவை சிவனந்தகாலனி பவர் ஹவுஸ் பகுதியில் 18 கூட்டமைப்புகளுடன் தொழில் முனைவோர்கள் உண்ணாவிரத போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்.
கோவை பாப்பநாயக்கன்பாளையம், சவுரிபாளையம், சிட்கோ, தடாகம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தொழிற் கூடங்கள் உள்ளிட்ட 25 ஆயிரம் தொழில் கூடங்கள் மூடப்பட்டுள்ளதால் 30 கோடி ரூபாய் வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர்.