மனைவி சுயஇன்பம் செய்கிறார்.. கணவரின் மனுவுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
Author: Hariharasudhan20 March 2025, 12:44 pm
மனைவி சுய இன்பத்தில் ஈடுபடுவது திருமணத்தை முறித்துக்கொள்ள ஒரு காரணமாக இருக்க முடியாது என உயர் நீதிமன்ற மதுரை அமர்வு கூறியுள்ளது.
மதுரை: கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த நபர் ஒருவர், மனைவியின் தொல்லையால் தனித்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. மேலும், தன்னுடைய மனைவியிடமிருந்து விவாகரத்தும் கோரியிருக்கிறார். ஆனால், இவருக்கு குடும்ப நீதிமன்றம் விவாகரத்து அளிக்கவில்லை. எனவே, இந்த உத்தரவை எதிர்த்து உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனுத் தாக்கல் செய்தார்.
அதில், “என் மனைவி ஆபாசப் படங்கள் பார்ப்பதற்கு அடிமையானவர். வீட்டு வேலைகளைச் செய்ய மறுத்தவர். அடிக்கடி சுயஇன்பத்தில் ஈடுபட்டவர். அவர் பால்வினை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்” எனத் தன்னுடைய மனுவில் கோரி விவாகரத்து கேட்டுள்ளார்.
இருப்பினும், அவர் தன்னுடைய மனைவி பாலியல் ரீதியாக பரவும் நோயால் பாதிக்கப்பட்டிருந்ததை உறுதிப்படுத்தும் எந்த ஆவணங்களையும் கணவர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லை. இந்த நிலையில், இந்த வழக்கை நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் ஆர்.பூர்ணிமா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

அப்போது, “ஒரு மனைவி ஆபாசப் படங்களைப் பார்ப்பதில் எந்த சட்டப்பூர்வச் சட்டங்களையும் மீறவில்லை என்றால், அந்தப் பழக்கம் ஒருவரின் தாம்பத்தியக் கடமைகளை நிறைவேற்றுவதில் பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றால், அத்தகைய செயல்கள் கொடுமைக்கு சமமாக இருக்க முடியாது.
எனவே, விவாகரத்துக்கான காரணமாக இருக்க முடியாது. தனிப்பட்ட முறையில் ஆபாசப் படங்களை பார்ப்பதும் குற்றமல்ல. ஆண்கள் மத்தியில் சுயஇன்பம் என்பது உலகளாவியது என்று ஒப்புக்கொள்ளப்பட்டபோது, பெண்கள் சுயஇன்பம் செய்வதை களங்கப்படுத்த முடியாது.
இதையும் படிங்க: தாம்பரத்தில் கொலை.. செஞ்சியில் உடல் புதைப்பு.. Ex MP உதவியாளர் கொடூர கொலையின் பின்னணி என்ன?
இது ஒரு பெண்ணின் பாலியல் சுயாட்சியையும், தனியுரிமைக்கான அடிப்படை உரிமையில், வாழ்க்கைத் துணையின் தனியுரிமையும் அடங்கும். மேலும், ஒரு பெண் திருமணத்திற்கு வெளியே பாலியல் உறவு கொண்டால், அது விவாகரத்துக்கு காரணமாகிவிடும்.
இருந்தாலும் சுய இன்பத்தில் ஈடுபடுவது திருமணத்தை முறித்துக்கொள்ள ஒரு காரணமாக இருக்க முடியாது. கற்பனையில் கூட, அது கணவருக்கு கொடுமையை ஏற்படுத்தும் என்றெல்லாம் சொல்ல முடியாது” எனக் கூறி விவாகரத்து கோரிய கணவரின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
