கீழ் பவானி வாய்க்காலில் குளித்து கொண்டிருந்தவர் நீரில் மூழ்கி பலி : 2வது நாளாக உடலை தேடும் தீயணைப்புத்துறை!!
Author: Udayachandran RadhaKrishnan19 April 2022, 2:46 pm
ஈரோடு : கீழ்பவானி வாய்க்காலில் மூழ்கி இறந்தவரின் உடலை தேடும் பணியில் இரண்டாவது நாளாக தீயணைப்பு துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சிக்கதாசம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் லேப் டெக்னீசியனாக பணிபுரிந்து வருகிறார்.
நேற்று முன்தினம் ராஜேந்திரன் சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் கரிதொட்டம்பாளையம் பகுதியிலுள்ள தனது நண்பர் வீட்டுக்கு சென்றுவிட்டு மாலை கீழ்பவானி வாய்க்காலில் குளிக்க சென்றுள்ளார்.
அப்போது திடீரென ராஜேந்திரன் நீரில் மூழ்கி தத்தளித்துள்ளார். இதை கண்ட வாய்க்காலில் குளித்து கொண்டிருந்த சிலர் ராஜேந்திரனை காப்பாற்ற முயற்சி செய்துள்ளனர்.
இருப்பினும் ராஜேந்திரன் ஆழமான பகுதிக்கு சென்றதால் அவரைக் காப்பாற்ற முடியாமல் உடனடியாக பவானிசாகர் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அப்பகுதி மீனவர்கள் உதவியுடன் ராஜேந்திரனை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
நீண்ட நேரமாகியும் நீரில் மூழ்கிய ராஜேந்திரன் உடல் கிடைக்காததால் இரவு காரணமாக தேடும் பணி நிறுத்தப்பட்டது. இந்நிலையில் இன்றுடன் இரண்டு நாளாகியும் ராஜேந்திரன் உடல் கிடைக்காததால் தீயணைப்புத்துறையினர் மற்றும் அப்பகுதி மீனவர்கள் உதவியுடன் காவல்துறையினர் இரண்டாவது நாளாக ராஜேந்திரனின் உடலை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.