விவாகரத்து செய்த மனைவியை பட்டப்பகலில் அரிவாளால் வெட்டிய கணவன்… சொத்து பிரச்சனையால் வெறிச்செயல்..!!!
Author: Babu Lakshmanan26 April 2022, 8:42 pm
திருச்சியில் பட்டப்பகலில் சொத்துக்காக விவாகரத்து செய்த மனைவியை வெட்டிய கணவனை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி ஸ்ரீரங்கம் கண்டி தெருவை சேர்ந்த சுரேஷ் (66) ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர். இவரது மனைவி ராஜேஸ்வரி (60) இவரை கடந்த 2007ம் ஆண்டு சுரேஷ் விவாகரத்து செய்துள்ளார். ராஜேஸ்வரி தற்போது திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டையிலுள்ள அக்கிரஹாரம் பகுதியில் வசித்து வருகிறார். சுரேஷ் முதல் மனைவியை விவாகரத்து செய்த பிறகு இன்னொரு பெண்ணுடன் குடும்பம் நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
இவர் மனைவிக்கு கொடுத்த காசோலை தொடர்பான வழக்கு தற்போது திருச்சி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. மேலும் சொத்து தொடர்பான பிரச்சினையும் இவர்களுக்குள் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், காசோலை தொடர்பான வழக்குக்காக இன்று திருச்சி நீதிமன்றத்தில் இருவரும் ஆஜராகினர். அதன் பின்னர் அங்கிருந்து அரசு மருத்துவமனை பகுதியில் பேருந்திற்காக ராஜேஸ்வரி நடந்து சென்று கொண்டிருந்த போது அங்கு வந்த சுரேஷ் அவரை அரிவாளைக் கொண்டு வெட்டி உள்ளார். இதில் படுகாயம் அடைந்த அவரை அங்கிருந்த பொதுமக்கள் காப்பாற்றி திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இதனை தொடர்ந்து அரசு மருத்துவமனை காவல்துறையினர் சுரேஷை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.