பொதுத்தேர்வில் பிட் அடிக்க மைக்ரோ துண்டு சீட்டுகள் : ஜெராக்ஸ் கடையில் நகல் எடுக்கும் 12ம் வகுப்பு மாணவர்களின் வீடியோ வைரல்!!
Author: Udayachandran RadhaKrishnan23 May 2022, 6:04 pm
விழுப்புரம் : விழுப்புரத்தில் அரசு பள்ளிகளில் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் பொது தேர்வில் மைக்ரோ துண்டு சீட்டுகளை பயன்படுத்துவதற்காக தனியார் ஜெராக்ஸ் கடையில் நகல் எடுக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகம் முழுவதும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. வேதியில் பாடத்திற்கான தேர்வு இன்று நடைப்பெற்று வருகின்றன. இந்நிலையில் அரசு பள்ளி மாணவர்கள் தேர்வுகளுக்கு துண்டு சீட்டுகளை கொண்டு தேர்வு எழுது வருவது கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த வாரம் நாமக்கல் மாவட்டத்தில் கிலோ கணக்கில் மாணவர்கள் கொண்டு சென்ற துண்டு சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
இந்நிலையில் விழுப்புரத்தில் உள்ள பல அரசு பள்ளிகளில் மைக்ரோ அளவிலான துண்டு சீட்டுகளை மாணவர்கள் பயன்படுத்தி தேர்வு எழுதுவது தொடர்ந்து வருகிறது .
அதிக அளவிலான துண்டு சீட்டுகளை மாணவர்கள் பதுக்கி வைத்து தேர்வு எழுதி வருவதாக தெரியவந்துள்ளது. பள்ளிக்கு அருகில் இருக்கக்கூடிய ஜெராக்ஸ் கடைகள் மூலம் இந்த மைக்ரோ துண்டு சீட்டுகள் அச்சிடப்பட்டு அவைகளை மாணவர்கள் கொண்டு சென்று தேர்வு எழுதுவது வழக்கமாகி உள்ளது.
இருப்பினும் மாவட்ட கல்வித் துறை சார்பில் ஆய்வுக்கு செல்லும் அதிகாரிகளும், கண்காணிப்பாளர்களும் இதனை கண்டுகொள்ளாமல் மாணவர்களுக்கு துணை போகிறார்களா என்பது கேள்விக்குறியாகி உள்ளது.
ஒழுக்கத்தை கடைபிடிக்க வேண்டிய மாணவர்கள் ஒழுக்கம் இன்றி தேர்வுகளை எழுதி வரும் நிலை மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுபோன்ற மாணவர்கள் நடவடிக்கையை பள்ளிக் கல்வித் துறையும், மாவட்ட நிர்வாகம் தடுத்து நிறுத்தி மாணவர்களின் ஒழுக்கத்தில் கவனம் செலுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.