தமிழகத்தை எத்தனையாக பிரித்தாலும் திமுக தான் ஆட்சி : அமைச்சர் ஐ.பெரியசாமி நம்பிக்கை..!!

Author: Babu Lakshmanan
7 July 2022, 5:56 pm

தமிழகத்தை எத்தனையாக பிரித்தாலூம் திமுக தான் ஆட்சியில் இருக்கும் கூட்டுறவு துறை அமைச்சர் ஐ. பெரியசாமி தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் அரசு சார்பாக பல்வேறு மாவட்டங்களில் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை சென்னையில் இருந்து தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் காணொளி வாயிலாக தொடங்கி வைத்தார். அதன்படி திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார் சத்திரத்தில் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடக்க விழாவும் கன்னிவாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சித் தலைவர் விசாகன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவிற்கு தமிழ்நாடு கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

இதில் அவர் பேசும்போது, ஆத்தூர் ஒன்றியத்தில் இரண்டு அரசு கலைக் கல்லூரிகள் தொடங்கி இருப்பதாகவும், பள்ளிகளுக்கு செல்வது போல அனைத்து மாணவர்களும் எந்த ஒரு தடையும் இன்றி கல்லூரிக்கு செல்வதற்கு ஏதுவாக மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்கள் கல்லூரிகளை தொடங்கி வைத்து வருவதாகவும் கூறினார்.

இன்று தொடங்கப்பட்டிருக்கும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி விரைவில் கட்டி முடிக்கப்பட்டு, மூன்று மாதங்களுக்குள் செயல்பாட்டுக்கு வரும் எனவும், 300 இடங்களுக்கு 2000 விண்ணப்பங்கள் வந்திருப்பதாகவும் பேசினார். மேலும், 100 நாள் வேலை திட்டத்திற்கு செல்பவர்கள் கூட எந்த ஒரு சிரமமும் இன்றி, அவர்கள் பிள்ளைகள் படிப்பதற்கு ஏதுவாக கல்லூரி தொடங்கப்பட்டிருப்பதாகவும் கூறினார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கூட்டுறவுத்துறை அமைச்சர் இ. பெரியசாமி பேசியதாவது :- தொடர்ச்சியாக இந்த அரசு கல்விப் பணியில் மிகச் சிறப்பாக தன்னுடைய பயணத்தை தொடங்கி இருக்கிறது. மக்களிடையே கொண்டு சேர்ப்பதில் இந்த அரசு உறுதுணையாக இருக்கும்.

ரெட்டியார்சத்திரம் பகுதி மக்கள் மட்டுமல்லாமல் மாவட்டம் முழுவதும் 5,6 கல்லூரிகள் தொடங்க முதல்வர் அவர்கள் அனுமதி கொடுத்திருக்கிறார். ஊரக உள்ளாட்சி நிர்வாகத்தில் பெண் தலைவர்களின் உறவினர்கள் தலையீடு இருந்தால், அது உடனடியாக நிவர்த்தி செய்யப்படும். தமிழ்நாட்டை எத்தனையாக பிரித்தாலும் திமுகவே ஆட்சிக்கு வரும், என்றும் பேசினார். இந்த விழாவில் கூட்டுறவு துறை மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

  • vijay famous dialogue what bro spoke by ajith in good bad ugly movie “வாட் ப்ரோ? இட்ஸ் வெரி ராங் ப்ரோ”… விஜய்யின் வசனத்தை பேசி சீண்டிப்பார்க்கும் அஜித்?