சாதி அரசியல் நடத்தறாங்க.. கீழ்சாதி என்பதால் அமைச்சர் என்னை அவமானப்படுத்தினார் : பதவியில் இருந்து விலகிய திமுக பிரமுகரின் ஆடியோ!!
Author: Udayachandran RadhaKrishnan8 September 2022, 8:42 pm
கோவை புறநகர் மாவட்ட திமுகவைச் சேர்ந்தவர் திப்பம்பட்டி ஆறுச்சாமி. தலைமைக் கழக பேச்சாளர் ஆன இவர், ஆதிதிராவிடர் நலக்குழுவின் மாநில துணைச் செயலாளராகவும் பதவி வகித்து வருகின்றார்.
இந்நிலையில் கடந்த மாதம், பொள்ளாச்சி ஆச்சி பட்டி அருகே திமுக சார்பில் மாற்றுக் கட்சியினர் இணையும் விழா நடைபெற்றது.
அப்பொழுது விழா மேடையில் அமர்ந்திருந்த திப்பம்பட்டி ஆறுச்சாமியை , வலுக்கட்டாயமாக கீழே இறங்க அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியதாகவும், தன்னை போலீசார் கீழே தள்ளியதாகவும் கூறும் திப்பம்பட்டி ஆறுச்சாமி , தான் ஒரு சிறுபான்மை சமூகத்தை சேர்ந்தவன் என்பதால் இச்சம்பவம் நடைபெற்றதாகவும், தற்போது திமுகவில் ஒரு சமுதாயத்தின் ஆதிக்கம் அதிக அளவில் உள்ளதால், அவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கப்பட்டு மேடையில் அமர வைக்கப்படுகிறார்கள்.
இது தனக்கு மிகுந்த அவமானத்தை ஏற்படுத்தி உள்ளதாக கூறும் திப்பம்பட்டி ஆறுச்சாமி, இது தொடர்பாக திமுக தலைவருக்கு தனது பொறுப்பு விலகல் கடிதத்தை அளித்துள்ளதாக அவர் பேசும் ஆடியோ வைரலாகி வருகிறது.