காணாமல் போன பெண் தண்ணீர் தொட்டியில் சடலமாக மீட்பு : தொட்டியை சுத்தம் செய்த போது பலி? போலீசார் விசாரணை!!

Author: Udayachandran RadhaKrishnan
14 September 2022, 4:03 pm

கோவை : சிங்காநல்லூர் பகுதியில் தூய்மை பணிக்குச் சென்ற 27 வயது பெண் தண்ணீர் தொட்டியில் மூழ்கி உயிரிழந்தார்.

கோவை ரத்தினபுரி தயிர் இட்டேரியை சேர்ந்தவர் மூர்த்தி. இவர் ஏற்கனவே இறந்து விட்டார். இவரது மனைவி தேவி (வயது 27). இவர் தனது சகோதரி சத்யா (வயது 33) என்பவருடன் சேர்ந்து கூலி வேலை செய்து வருகிறார். இந்நிலையில், நேற்று இருவரும் உப்பிலிபாளையத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

பின்னர் சிறிது நேரம் கழித்து தேவியை காணவில்லை. சத்யா அவரை பல இடங்களில் தேடினார். அப்போது அங்குள்ள தண்ணீர் தொட்டிக்குள் மூழ்கிய நிலையில் தேவி உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த சத்யா அக்கம்பக்கத்தினர் உதவியுடன் தேவியை மீட்க முயன்றதோடு, தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தார்.

விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் நீரில் மூழ்கிய தேவியை சடலமாக மீட்டனர். இதனையடுத்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக சிங்காநல்லூர் போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது. தேவி தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்த போது தவறி விழுந்து நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இருப்பினும் சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வேறு ஏதேனும் காரணம் இருக்குமா? என்றும் விசாரித்து வருகின்றனர்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ