கதவை திறந்ததும் ஐஸ் பெட்டி போல இருந்த வீடு.. சடலமாக கிடந்த தாய் – மகன் : விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!!

Author: Babu Lakshmanan
31 January 2023, 4:46 pm
Quick Share

மதுரை : மதுரையில் தாய், மகன் வீட்டில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை கரிமேடு காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட கோச்சடை பகுதியில் உள்ள மல்லிகை தெருவை சேர்ந்தவர் உமாசங்கர் (46). இவர் SMJ என்கிற ஷேர் மார்க்கெட் கம்பெனி நடத்தி வருகிறார்.

இவருக்கு திருமணம் ஆகி குழந்தைகள், மனைவியுடன் வாழ்ந்து வந்த நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்று, வேறொரு பெண்ணை திருமணம் செய்து வாழ்ந்து வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பாக 2வது மனைவிக்கும், உமா சங்கருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் 2ஆவது மனைவி வீட்டிலிருந்து சென்றுள்ளார். இதனையடுத்து, உமாசங்கர் தனது தாய் விஜயலெட்சுமி (73)யுடன் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் உமா சங்கரின் அலுவலகத்தில் பணிபுரிபவர்களும், அவரது நண்பர்களும் செல்போனில் தொடர்புகொண்டபோது போன் எடுக்காத நிலையில் போன் ஆஃப் ஆகியுள்ளது. இதனால் சந்தேகமடைந்த உமா சங்கரின் நண்பர்கள் இது குறித்து கரிமேடு காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.

காவல்துறையினர் நேரில் சென்று பார்த்தபோது கதவு திறக்கப்படாமலே இருந்துள்ளது. இதனையடுத்து, கதவை உடைத்து சென்று அறையில் பார்த்தபோது, உமாசங்கர் மற்றும் அவரது தாயார் விஜயலட்சுமி ஆகிய இருவரும் விஷம் அருந்திய நிலையில் சடலமாக கிடந்துள்ளனர். உடல் அழுகிவிடக்கூடாது என்பதற்காக அறை முழுவதிலும் ஏசியை ஓடவிட்டபடி விஷம் அருந்தி உயிரிழந்துள்ளனர்.

இதனையடுத்து, காவல்துறையினர் தடயவியல் நிபுணர்களுடன் சோதனைக்கு பின்னர் 2 அல்லது 3 நாட்களுக்கு முன்பாக தற்கொலை செய்திருக்கலாம் என தெரியவந்த நிலையில், உடலை கைப்பற்றி அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு காவல்துறையினர் உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்தனர்.

காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்ததில் நஷ்டம் ஏற்பட்ட நிலையில், கடன் ஏற்பட்டு, அதனால் மனைவியுடன் சண்டையிட்டதும் தெரியவந்துள்ளது.

இந்த தற்கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள கரிமேடு் காவல்துறையினர் ஷேர் மார்க்கெட்டில் ஏற்பட்ட இழப்பின் காரணமாக தற்கொலையா? அல்லது குடும்ப பிரச்சனை காரணமாக தற்கொலை செய்து கொண்டனரா என விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரையில் தாயும், மகனும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

Views: - 424

0

0