திருமணமான 3 மாதத்தில் கல்லூரி மாணவி மர்ம மரணம்.. விசாரணையில் ஷாக் : உறவினர்கள் போராட்டம்!

Author: Udayachandran RadhaKrishnan
27 May 2024, 11:04 am
suic
Quick Share

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அடுத்த முத்துக்கிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்த சரஸ்வதி (வயது 19)இவர் குறிஞ்சிப்பாடி பகுதியில் உள்ள திருவள்ளுவர் கலைக் கல்லூரியில் பிஎஸ்சி இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.

இந்த நிலையில் சரஸ்வதிக்கும் பண்ருட்டி அருகே உள்ள சீரங்குப்பம் பகுதியை சேர்ந்த ஜெயகணேஷ் (வயது 24) என்பவருக்கும் பெரியவர்களால் நிச்சயக்கப்பட்டு கடந்த மார்ச் மாதம் 24 தேதி இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது.

சரஸ்வதி திருமணத்திற்காக மட்டும் விடுமுறை எடுத்துக் கொண்டு திருமணம் முடிந்து சில நாட்களில் கல்லூரிக்கு சென்று படிப்பைத் தொடர்ந்தார்.

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை கல்லூரி விடுமுறை என்பதால் வீட்டில் தனியாக இருந்துள்ளார். ஆனால் வீட்டு கதவு நீண்ட நேரம் பூட்டி இருந்ததாக கூறப்படுகிறது.

சந்தேகம் அடைந்த அருகில் இருந்தவர்கள் வீட்டின் ஜன்னல் வழியாக பார்க்கும் போது சரஸ்வதி தனது துப்பட்டாவால் தூக்கிலிட்டு பிணமாக தொங்கிய நிலையில் இருந்துள்ளார், அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் காடாம்புலியூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின் அடிப்படையில் காடாம்புலியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் படிக்க: மருத்துவ பரிசோதனை காரணமாக ஜாமீனை நீட்டிக்க வேண்டும் : டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் மனு!

தகவல் அறிந்து சரஸ்வதி பெற்றோர் மற்றும் உறவினர்கள் மருத்துவமனை வளாகத்தில் கூடினர். மேலும் தனது மகள் திருமணம் ஆகி மூன்று மாதத்தில் உயிரிழந்திருப்பதால் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் மற்றும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

காடாம்புலியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து கொலையா அல்லது தற்கொலையா என விசாரணை மேற்கொண்டு வருகின்றன, திருமணம் ஆகிய கல்லூரி மாணவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது..

Views: - 137

1

0