கம்பளம் விரித்தாரா விஜய்? இன்று மாலை அறிவிக்கும் காளியம்மாள்!
Author: Hariharasudhan22 February 2025, 12:06 pm
நாதக பொறுப்பை குறிப்பிடாமல் காளியம்மாள் பெயர் இடம்பெற்ற அழைப்பிதழ் வைரலான நிலையில், இது குறித்து மாலையில் தெரிவிப்பதாக அவர் கூறியுள்ளார்.
சென்னை: சீமான், தலைமை ஒருங்கிணைப்பாளராக செயல்படும் கட்சி, நாம் தமிழர் கட்சி. இந்தக் கட்சியின், மாநில மகளிர் அணிப் பாசறை ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக காளியம்மாள் என்பவர் உள்ளார். நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த காளியம்மாளின் பேச்சுக்கு, தனிப்பட்ட தொண்டர் படையும் உண்டு.
முன்னதாக, இவர் நாம் தமிழர் கட்சி சார்பில் வடசென்னை மற்றும் மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி வேட்பாளராகவும், பூம்புகார் பகுதியில் சட்டமன்ற வேட்பாளராகவும் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். அது மட்டுமல்லாமல், கடந்த 2018ஆம் ஆண்டு நாதகவில் இணைந்த அவர், ஆறு வருடங்களாகப் பயணித்து வருகின்றனர்.
இதனிடையே, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கும், காளியம்மாளுக்கும் கருத்து வேறுபாடுகள் இருப்பதாக சில ஆடியோக்கள் வெளியாகின. இதற்கு சீமானும் விளக்கம் அளித்திருந்தார்.
இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டம், மணப்பாட்டில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றின் அழைப்பிதழில், நாம் தமிழர் கட்சியின் பொறுப்பை குறிப்பிடாமல், சமூக செயற்பாட்டாளர் என காளியம்மாளின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால், அவர் நாம் தமிழர் கட்சியில் உள்ளாரா? அல்லது விலகியுள்ளாரா? என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மலை உச்சியில் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை.. புகாரளிக்காமலே சுட்டுப் பிடித்த போலீசார்.. கிருஷ்ணகிரியில் நடந்தது என்ன?
இந்த நிலையில், இது தொடர்பாக தனியார் செய்தி தொலைக்காட்சியிடம் பேசிய காளியம்மாள், தனது நிலைப்பாடு குறித்து இன்று விளக்கம் அளிப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி, விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியதும் நினைவில் கொள்ள வேண்டிய ஒன்று.