‘எனக்கே டம்ளர் கொடுக்க மாட்டீயா’.. டீக்கடை உரிமையாளரை சரமாரியாக தாக்கிய போதை ஆசாமி; அதிர்ச்சி சிசிடிவி காட்சி!!

Author: Babu Lakshmanan
22 April 2023, 11:11 am

நெல்லை ; நெல்லையில் மது அருந்த டம்ளர் கொடுக்காத டீக்கடை உரிமையாளரை சரமாரியாக தாக்கிய குடிமகன் கைது செய்யப்பட்டுள்ளார்.

நெல்லை டவுண் தொண்டர் சன்னதியில் சுப்பையா என்பவர் டீக்கடை நடத்தி வருகிறார். இவர் வழக்கம் போல் இன்று அதிகாலை நான்கு மணிக்கு கடையை திறந்து வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தார். அப்போது அந்த பகுதியைச் சேர்ந்த மாரி என்ற மாரியப்பன் (39) சுப்பையாவின் டீக்கடைக்கு சென்றுள்ளார். அப்போது மாரியப்பன் கையில் மது பாட்டிலுடன் டீக்கடைக்கு சென்றதாக கூறப்படுகிறது.

மேலும், மது அருந்த டம்ளர் தரும்படி சுப்பையாவிடம் மாரியப்பன் கேட்டுள்ளார். அதற்கு சுப்பையா டீக்கடையில் வைத்து மது அருந்தக்கூடாது என்று கூறியதோடு டம்ளர் கொடுக்கவும் மறுத்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த மாரியப்பன் டீக்கடைக்குள் புகுந்து சுப்பையாவை சரமாரியாக தாக்கியுள்ளார்.

பின்னர், அங்கிருந்த சிலர் அவரை சமானப்படுத்தி அங்கிருந்து அப்புறப்படுத்தியுள்ளனர். இதற்கிடையில் மாரியப்பன் சுப்பையா தாக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையில் சுப்பையா அளித்த புகாரின் பேரில் டவுண் போலீசார், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து மாரியப்பனை கைது செய்தனர். மாரியப்பன் டவுன் பகுதியில் சுமை தூக்கும் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். ஏற்கனவே மதுவால் கொலை, கொள்ளை என பல்வேறு குற்றங்கள் தொடர்ச்சியாக நடந்து வரும் சூழ்நிலையில், அதிகாலை 4 மணிக்கெல்லாம் மது அருந்த டம்ளர் கேட்டு அதை கொடுக்காத டீக்கடை உரிமையாளரை தொழிலாளி தாக்கிய சம்பவம் நெல்லையில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

மேலும், அதிகாலை நேரம் மாரியப்பனுக்கு மது எப்படி கிடைத்தது என்பது குறித்தும், அவர் கள்ளச் சந்தையில் மது வாங்கினாரா என்பது குறித்தும் போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

https://player.vimeo.com/video/820040744?h=c86c79aae2&badge=0&autopause=0&player_id=0&app_id=58479
  • kalanidhi maran office 8th floor was locked for many years கலாநிதி மாறன் அலுவலகத்தில் அமானுஷ்யம்? 8 ஆவது மாடியில் அப்படி என்ன இருக்கிறது?