தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லை நெல்லையப்பர் திருக்கோவில். இது மிகவும் வரலாற்று சிறப்புமிக்க ஸ்தலமாகும். ஆனி திருவிழா கடந்த 13ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 21 ம் தேதியான இன்று தேரோட்ட நிகழ்வு நடைபெறுவதாக இருந்தது. அதேபோல் இன்று காலை முதல் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு தேரை இழுக்க தயாராக இருந்தனர்.
தேர் இழுக்க ஆரம்பிக்கும் பொழுதே தேரில் நான்கு வடமும் அறுந்து விழுந்தது. இந்த தேர் 450 டன் எடை கொண்டதாகும். தேரின் வடம் அறுந்ததில் தேர் சாயாமல் இருந்ததால் யாருக்கும் எந்த விபரீதமும் ஏற்படவில்லை. இதனால்
அங்கிருந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் இத்தனை ஆண்டுகளாக பராமரிக்கப்பட்ட இந்த தேர் எப்படி இந்த நிலைமைக்குள்ளானது என்று அனைவரும் ஆத்திரமடைந்தனர்.
தற்போது அறுந்து விழுந்த வடங்களை அகற்றி புதிய வடங்களை செலுத்தி தேர் இழுக்க முயன்ற பொழுது அடுத்தடுத்து மூன்று முறையும் வடங்கள் அறுந்து விழுந்தது. நான்காவது முறையாக வடம் செலுத்தப்பட்டு தேர் மெதுவாக இழுக்கப்பட்டு வருகிறது ஏற்கனவே தேரை ஆய்வு செய்த ஆய்வாளர்கள் முறையாக தேரினை ஆய்வு செய்திருந்தால் இது போன்ற சம்பவம் நடந்திருக்காது.அரசின் அறநிலையத்துறையின் அலட்சியம் தான் இதற்கு காரணம் என்று பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.