மலைவாழ் மக்களிடம் லஞ்சம் வாங்கிய அதிகாரி… பசுமை வீடு திட்டத்திற்காக லஞ்சம் வாங்கிய கொடுமை… வைரலாகும் வீடியோ..!!
Author: Babu Lakshmanan18 May 2022, 7:53 pm
திருச்சி மாவட்டம், துறையூர் வட்டார வளர்ச்சி அலுவலர் மலைவாழ் மக்களிடம் லஞ்சம் பெறும் வீடியோ வைரலாகி வருகிறது.
துறையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆக பணிபுரிந்து வருபவர் மணிவேல். இவர் துறையூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வண்ணாடு ஊராட்சி பாளையம் கிராமத்தைச் சேர்ந்த பசுமை வீடு திட்டத்தின் கீழ் பயன்பெற உள்ள பயனாளிகளிடம் லஞ்சம் வாங்கும் வீடியோ நேற்று சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.
அந்த வீடியோவில் பயனாளிகள் ஐந்து பேர் வட்டார வளர்ச்சி அலுவலர் அறைக்குள் வருவதும், அதில் ஒருவர் தாங்கள்
5 பேர் வந்துள்ளதாகவும், ஒரு வீட்டிற்கு 3000 வீதம் 15 ஆயிரம் ரூபாய் எடுத்து வந்துள்ளதாகவும் கூறி, 15 ஆயிரம் பணத்தை மணிவேல் இடம் கொடுக்கிறார். அந்த பணத்தை பெற்ற அவர் மீதி தொகையை நான் பச்சை மலைக்கு வரும் பொழுது தரவேண்டும் என கூறுகிறார்.
பின்னர் அருகில் இருந்த நபர் ஒருவர், “சார் இந்த தொகைகுள்ளேயே அனைத்து வேலைகளையும் முடித்து தந்து விடுவார் என கூறுவதும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. துறையூரில் வட்டார வளர்ச்சி அலுவலர் ஒருவர் பழங்குடியின மக்களிடம் லஞ்சம் வாங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.