ஒரு வருசமா போராடுறேன்… பொதுக் கழிப்பிடம் கட்ட எதிர்ப்பு : மண்ணெண்ணெய் கேனுடன் தீக்குளிக்க வந்த பெண்ணால் பரபரப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
29 July 2022, 4:12 pm

கோவை : பொள்ளாச்சி அருகே பொதுக்கு கழிப்பிடம் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெண் ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொள்ளாச்சி அருகே உள்ள பூசாரிபட்டியை சேர்ந்தவர் கிருஷ்ண வேணி (வயது 40). இவரது வீட்டின் அருகே உள்ள அரசு புறம் போக்கு இடத்தில் ஊராட்சி மூலம் கழிப்பிடம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கு கிருஷ்ணவேணி எதிர்ப்பு தெரிவித்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் கிருஷ்ணவேணி வெளியூருக்கு சென்று விட்டு நேற்று வீட்டிற்கு திரும்பி வந்தார்.அப்போது கழிப்பிட கட்டுமான பணிகள் தொடங்கி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர் தீக்குளிக்க போவதாக மண்எண்ணெய் கேனுடன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த வருவாய் துறை அதிகாரிகள் விரைந்து வந்து கிருஷ்ணவேணியிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். அப்போது உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் கூறியதை தொடர்ந்து அவர் போராட்டத்தை கைவிட்டார். இந்த சம்பவம் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

இது குறித்து அந்த பெண் கூறியதாவது, கடந்த ஒரு வருடமாக இந்த இடத்தில் கழிப்பிடம் கட்டக்கூடாது என கூறி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தேன். ஆனால் நடவடிக்கை எடுக்கவில்லை. எங்களுக்கு உதவி செய்ய யாரும் இல்லை. இங்கு கழிப்பிடம் வந்தால் நான் தற்கொலை செய்வேன் என கூறினாலும் பரவாயில்லை என சொல்கிறார்கள்.

ஒருவேளை இங்கு கழிப்பிடம் வந்தால் நான் என் குடும்பத்தினருடன் தற்கொலை செய்து கொள்வேன் என அப்பெண் பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ