பெண் பயணியை ஒருமையில் திட்டியதால் ஆத்திரம்…. தனியார் பேருந்து நடத்துனரை நையப்புடைத்த இளைஞர்கள்!!

Author: Babu Lakshmanan
11 February 2024, 7:35 pm

திருச்சியில் ஓடும் பேருந்தில் பெண் பயணியை ஒருமையில் திட்டிய தனியார் பேருந்து நடத்துனரை நையப்புடைத்த இளைஞர்களின் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி காட்டூரை சேர்ந்த நாகராஜ் என்பவரது மகன் மூக்கையா (22). இவர் தனியார் பேருந்து நடத்துனராக பணியாற்றி வருகிறார். வழக்கம் போல் பேருந்து சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து துவாக்குடி நோக்கி சென்று கொண்டிருந்தது.

அப்போது, சூளக்கரை மாரியம்மன் கோவில் பேருந்து நிறுத்தத்தில் இறக்க வேண்டிய பெண் பயணி ஒருவரை பேருந்து நிறுத்தத்தில் இருந்து சற்று தள்ளி, நிறுத்தி இறக்கி விட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பெண் மூக்கையாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில் மூக்கையா அந்த பெண் பயணியை ஒருமையில் (போடி) திட்டி அனுப்பியதாக கூறப்படுகிறது.

இதன் பின்னர் பேருந்து துவாக்குடி சென்று மீண்டும் சத்திரம் பேருந்து நிலையம் நோக்கி வந்த போது சூளக்கரை மாரியம்மன் பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த இளைஞர்கள் 5 பேர், பேருந்தில் ஏறி கைகளால் மூக்கையாவை கடுமையாக தாக்கினர். இதில் கடுமையான காயமடைந்த மூக்கையா காந்தி மார்க்கெட் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

பேருந்தில் சிசிடிவி கொடுக்கப்பட்டிருந்தால் அந்த காட்சியை வைத்து தாக்குதலில் ஈடுபட்ட அந்தப் பெண்ணின் உறவினர்களான 5 இளைஞர்களையும் காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.

  • Tamannaah Bhatia and Vijay Varma part ways after years of dating காதலரை பிரிந்தார் நடிகை தமன்னா.. இதுக்கும் அவருதான் காரணமா? இன்ஸ்டா பதிவால் பரபர!