இடமில்லாத பகுதிகளுக்கு பட்டா? அமைச்சர் மூர்த்தி சொன்ன முக்கிய தகவல்!
Author: Udayachandran RadhaKrishnan22 March 2025, 1:53 pm
வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திலிருந்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் மகளிர் விடியல் பயணத்திற்கான 36 புதிய பேருந்துகளை பயன்பாட்டுக்கு கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த பேருந்துகள் மதுரை மாவட்டம் மேலூர், உசிலம்பட்டி, திருமங்கலம், கல்லுப்பட்டி, பேரையூர், கொட்டாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு இயக்கப்படுகின்றன.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் மூர்த்தி, அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் கிராமப்புறத்தில் உள்ளவர்கள் எளிதில் சென்று வரக்கூடிய வகையில் மதுரை மாவட்டத்திற்கென 100 புதிய பேருந்துகளை ஒதுக்கி தந்த தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதோடு இன்று 36 பேருந்துகளை முதற்கட்டமாக துவக்கி வைத்துள்ளோம் என்றார்.
முதலமைச்சரின் மதுரை வருகை குறித்து கேள்விக்கு, வெகு விரைவில் தமிழ்நாடு முதலமைச்சர் மதுரை மாவட்டத்திற்கு வருகை தர உள்ளார். அப்போது பல்வேறு திட்ட பணிகளை தொடங்கி வைப்பதோடு அரசு நலத்திட்ட உதவிகளை அனைவருக்கும் வழங்கிட உள்ளார் அதன் விவரம் விரிவாகப் பின்னால் வெளியிடப்படும் என்றார்.
பொதுமக்களுக்கு வழங்கிய பட்டாவில் இன்னும் சில இடங்கள் மக்களுக்கு கிடைக்கவில்லை என புகார் எழுந்துள்ளது குறித்த கேள்விக்கு ? பட்டாவை பொறுத்தளவில் முறையாக அரசு உட்பட்டு இருக்க கூடிய இடங்கள் பட்டா கொடுத்து நேரடியாக சென்றுள்ளது. துணை முதல்வர் அவர்கள் 13000 பட்டா கொடுத்துள்ளோம். அது மக்களுக்கு உடனடியாக போய் சென்றடைந்துள்ளது.
இப்போது புதியதாக முதல்வர் அவர்கள் மதுரை வருகிற போது மாநகராட்சி பகுதியில் பேரூராட்சி பகுதியில் நகராட்சி பகுதிகளில் ஊராட்சி பகுதிகளில் மக்களுக்கு அவர்கள் குடியிருக்கிற பகுதியில் தகுதியுள்ள நபர்களுக்கு அரசு புறம்போக்கு பகுதிகளில் அரசு விதிகளுக்குட்பட்டு பட்டா வழங்கப்படும்,
உயர்நீதிமன்ற உத்தரவின் படி நீர்நிலை புறம்போக்கு ஓடை புறம்போக்கு கண்மாய் புறம்போக்கு ஆகிய பகுதிகளுக்கு பட்டா வழங்கிட இயலாது மேலும் மாநகராட்சி பகுதியாக இருந்தால் ஒரு சென்ட் இடமும் அதற்கு கூடுதலாக இருந்தால் கட்டணமும் நகராட்சி பகுதியாக இருந்தால் இரண்டு சென்ட் இடமும் ஊராட்சி பகுதியாக இருந்தால் மூன்று சென்ட் இடமும் பட்டாவாக வழங்கப்பட உள்ளது.
14 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த பணியை நேர்த்தியான முறையில் அனைவருக்கும் பாகுபாடு இன்றி அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் நிறைவேற்ற பணியில் ஈடுபட்டு வருகிறோம். இடமில்லாத பகுதிகளுக்கு பட்டா அளித்ததாக வரக்கூடிய தகவல்கள் உண்மையல்ல என்றார். , அதோடு மினி பேருந்து திட்டம் கூட முறையாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்ய பட்டுள்ளது என்றார்.