துர்நாற்றம் வீசிய வீடு.. கொடூரமாகக் கிடந்த கருணாஸ் கட்சி நிர்வாகி.. சென்னையில் அதிர்ச்சி!
Author: Hariharasudhan31 March 2025, 12:43 pm
சென்னை, விருகம்பாக்கத்தில் வழக்கறிஞர் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்படுகிறது.
சென்னை: சென்னையின் விருகம்பாக்கம், கணபதிராஜ் நகர் பிரதான சாலையில் கடந்த இரண்டு நாட்களாக பூட்டிக் கிடந்த ஒரு வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது, எனவே, அக்கம்பக்கத்தில் வசிக்கும் பொதுமக்கள், இது குறித்து நேற்று மாலை விருகம்பாக்கம் போலீசார் மற்றும் வீட்டு உரிமையாளருக்கு தகவல் அளித்துள்ளனர்.
இதன் பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற போலீசார், அந்த வீட்டின் முன்பக்க கதவு பூட்டி இருந்ததைப் பார்த்துள்ளனர். பின்னர், திறந்து கிடந்த பின்புறக் கதவு வழியாக போலீசார் வீட்டுக்குள் சென்று பார்த்துள்ளனர். அப்போது, உள்ளே ஒருவர் தலையில் வெட்டுக்காயங்களுடன் சடலாமாக கிடந்துள்ளார்.
மேலும், அவரது உடல் அழுகிய நிலையிலும், அவரைத் தாக்கப் பயன்படுத்திய கத்தியும் அவரது முகத்திலே கொடூரமாகக் கிடந்துள்ளது. அதேநேரம், அவர் கொலை செய்யப்பட்டு இரண்டு நாட்களுக்கு மேல் ஆகி இருக்கலாம் எனவும் தெரிகிறது. இதனையடுத்து, உடலை மீட்ட போலீசார், பிரேதப் பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து, வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணையை நடத்தினர். இந்த விசாரணையில், கொலை செய்யப்பட்டு கிடந்தவர் ஆதம்பாக்கம் பிருந்தாவன் நகரைச் சேர்ந்த வெங்கடேசன் (43) என்பதும், இவர் வழக்கறிஞர் என்பதும் தெரிய வந்துள்ளது. மேலும், அவர் தனது நண்பர் கார்த்திக் என்பவருடன் சேர்ந்து அந்த வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கி இருந்துள்ளார்.
இதையும் படிங்க: செங்கோட்டையனும், விஜயும்.. அண்ணாமலை சொன்ன சீக்ரெட்!
மேலும், 4 மாதங்களுக்கு முன்பு இந்த அடுக்குமாடி குடியிருப்பில் குடியேறியதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த நிலையில், கொலையில் தொடர்புடைய கார்த்திக் என்பவரைப் பிடிக்க தனிப்படை போலீசார் அமைக்கப்பட்டு விசாரணையைத் தீவிரப்படுத்தி உள்ளார்.
மேலும், சிவகங்கை சரித்திரப் பதிவேடு குற்றவாளியான கார்த்திக் மீது ஏற்கனவே 27 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. அதேநேரம், கொலை செய்யப்பட்ட வழக்கறிஞர் வெங்கடேசன், நடிகர் கருணாஸின் முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் நிர்வாகி ஆவார்.