‘அவர உனக்கு தெரியாதா?’.. வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு.. நடந்து வந்தவருக்கு அரிவாள் வெட்டு.. நெல்லையில் பயங்கரம்!
Author: Hariharasudhan18 December 2024, 11:20 am
நெல்லையில், வீட்டில் இருந்தவரிடம் முகவரி கேட்டு, வீடு மீது பெட்ரோல் குண்டு வீசியும், நடந்து சென்றவரை அரிவாளால் வெட்டிய மர்ம கும்பல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருநெல்வேலி: நெல்லை மாவட்டம், பாப்பாக்குடி அடுத்த பள்ளக்கால் பொதுக்குடி என்ற இடத்தில் மைதீன் என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இந்த நிலையில், நேற்று இரவு அவர் தனது வீட்டில் இருந்துள்ளார். அப்போது அங்கு 7 பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று வந்து உள்ளது.
தொடர்ந்து, மைதீனை அழைத்த அக்கும்பல், ஒரு பெயரைக் கூறி, அவரது முகவரியைக் கேட்டு உள்ளனர். ஆனால், அவர் வீட்டை பூட்டிவிட்டு வெளியே வராததால், அரிவாளால் மைதீன் வீட்டினுடைய கதவு மற்றும் ஜன்னல் கதவுகளை தாக்கி உள்ளனர். அது மட்டுமல்லாமல், மைதீன் வீட்டின் மீது பெட்ரோல் குண்டையும் வீசி உள்ளனர்.
பின்னர், அந்த நேரத்தில் அவ்வழியாக வந்த மசூது என்ற இளைஞரை, அந்த மர்ம கும்பல் அழைத்துள்ளனர். தொடர்ந்து, அந்த இளைஞரை மைதீன் வீட்டின் கதவைத் திறக்க முயற்சி செய்யுமாறும் கூறியுள்ளனர். அதற்கு அவர் மறுப்பு தெரிவிக்கவே, ஆத்திரம் அடைந்த அக்கும்பல் மசூதுவை கடுமையாக அரிவாளால் ஓடஓட விரட்டி வெட்டி உள்ளனர்.

இதனால் அவரது கை, கால் போன்ற இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டு உள்ளது. இதனையடுத்து, படுகாயம் அடைந்த மசூதுவை மீட்ட அக்கம் பக்கத்தினர், அவரை அரசு மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர். அதேநேரம், பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் வீட்டின் கதவு மற்றும் ஜன்னல் ஆகிய பகுதிகளில் சேதம் அடைந்துள்ளது.
இதையும் படிங்க: திருப்பூரில் திமுக அரசுக்கு எதிராக கடையடைப்பு போராட்டம்.. வெறிச்சோடிய கடைவீதி : மக்கள் அவதி!
பின்னர், இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்பாக இது தொடர்பாக போலீசார் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்த 7 பேர் கொண்ட மர்ம கும்பல் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.
மேலும், கைப்பற்றப்பட்ட சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் சிறார்கள் என்பதும் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து, இதற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வரும் போலீசார், சிறார்களை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.