‘திமுகவின் கைக்கூலியா நீங்க’… அதிமுக போஸ்டரை கிழித்த போலீஸார்… வாக்குவாதத்தில் ஈடுபட்ட அதிமுகவினர்..!!!
Author: Babu Lakshmanan12 March 2024, 4:41 pm
பெரம்பலூரில் நள்ளிரவில் அதிமுகவின் போஸ்டரை போலீஸ்காரர் ஒருவர் கிழித்ததால், அதிமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் போதை பொருளின் புழக்கத்தை தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம் அறிவிக்கப்பட்டது. அதன்படி, மாநில தழுவிய போராட்டமும் நடைபெற்றது.
முன்னதாக, பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெறும் மனித சங்கிலி போராட்டம் குறித்து அனைத்து இடங்களிலும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இருந்தது. இதனை நேற்று நள்ளிரவு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர், பெரம்பலூர் நகர பகுதியில் அனைத்து இடங்களிலும் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டியை காவல்துறையினர் கிழித்த சம்பவம் பெரம்பலூரில் மிகுந்த பரபரப்பு ஏற்படுத்தியது.
இதனைக் கண்ட பெரம்பலூர் நகர கழகச் செயலாளர் ராஜபூபதி மற்றும் கட்சி நிர்வாகிகள் காவல்துறையினரை கண்டித்து திமுகவிற்கு கைக்கூலியாக செயல்படாமல் தங்களது பணியை செய்ய வேண்டும் எனவும், தங்கள் போஸ்டரை கிழித்தால் போராட்டம் நடைபெறும் எனவும் எச்சரிக்கை விடுத்தனர்.