அரசு மருத்துவமனையில் பவர் கட்.. நிறைமாத கர்ப்பிணிக்கு நேர்ந்த கொடுமை : தனியார் மருத்துவமனைக்கு சென்ற அவல நிலை!!

Author: Udayachandran RadhaKrishnan
22 September 2022, 3:57 pm

ஜெனரேட்டர் வேலை செய்யாததால் கர்ப்பிணிப் பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்ய இயலாமல் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்ற அவலம் அரங்கேறியுள்ளது.

கோவை மாவட்டம் அன்னூர் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்ணுக்கு அறுவை சிகிச்சையின் போது மின்தடை ஏற்பட்ட நிலையில் ஜெனரேட்டர் வேலை செய்யாததால் பிரசவத்துக்கு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கோவை மாவட்டம் அன்னூர் அடுத்த ஊத்துப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் விக்னேஸ்வரன், வான்மதி தம்பதியினர். விக்னேஸ்வரன் தனியார் பனியன் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார்.

இந்த நிலையில் நிறை மாத கர்ப்பிணியான தனது மனைவி வான்மதியை அன்னூர் அரசு மருத்துவமனைக்கு பிரசவத்திற்காக அழைத்து வந்துள்ளார்.

அப்போது வான்மதிக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள திட்டமிட்ட நிலையில், மருத்துவமனையில் மின்தடை ஏற்பட்டது.

உரிய நேரத்தில் ஜெனரேட்டர் வேலை செய்யாததால் வான்மதிக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள இயலாத நிலை உருவானது. இதையடுத்து விக்னேஸ்வரன் தனது மனைவியை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதித்தார்.

அங்கு அவருக்கு ஆண் குழந்தை பிறந்த நிலையில் குழந்தை மற்றும் தாயை மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஜெனரேட்டர் வேலை செய்யாததால் கர்ப்பிணி பெண் ஒருவர் அறுவை சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு சென்ற சம்பவம் அங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இதுகுறித்து விளக்கம் கேட்க அன்னூர் அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் வேலாயுதத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது அவர் அழைப்பை ஏற்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

  • Jyothika controversy in Bollywood web series ஜோதிகா நீங்களே இப்படி பண்ணலாமா…படு கேவலம்…முகம் சுளித்த ரசிகர்கள்.!