அரசு பேருந்து ஓட்டுநரை தாக்கிய தனியார் பேருந்து ஓட்டுநர் : அரசு பேருந்து ஓட்டுநர்கள் ஒன்று கூடி திடீர் தர்ணா.. பொதுமக்கள் அவதி!!
Author: Udayachandran RadhaKrishnan10 May 2022, 6:06 pm
கோவை : தனியார் பேருந்து ஓட்டுனர் அரசு பேருந்து ஓட்டுனரை மீது தாக்கியதால் அனைத்து அரசு பேருந்துகளின் ஓட்டுநர்கள் காந்திபுரம் பேருந்து நிலையத்தில் நிறுத்தி தர்ணாவில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவையில் தனியார் பேருந்து (எண்: 45) உக்கடத்தில் இருந்து காந்திபுரம் வழியாக வெள்ளமடை வரை செல்கிறது. இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை உக்கடத்தில் இருந்து புறப்பட்ட அந்த தனியார் பேருந்தை சந்தோஷ் என்பவர் ஓட்டினார். வெங்கடேஷ் என்பவர் ஓட்டுனராக இருந்துள்ளார்.
அந்த பேருந்து காந்திபுரம் நகரப்பேருந்து நிலையத்திற்குள் உள்ளே சென்றது. அப்போது 3ஹெச் என்ற இலக்கமிட்ட அரசு பேருந்து ஒன்று தனியார் பேருந்துக்கு வழி விடவில்லை என்று கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து தனியார் பேருந்து ஓட்டுநர் சந்தோஷ் மற்றும் அவருடன் இருந்த வெங்கடேஷ் மற்றும் ரஞ்சித் ஆகியோர் சேர்ந்து அரசு பேருந்து ஓட்டுநர் கார்த்திக் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இந்த வாக்குவாத முற்றவே இரு தரப்பிற்கும் இடையே கைகலப்பானது. இதில் கார்த்திக் காயமடைந்தார். தொடர்ந்து அவர் கோவை அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில், காந்திபுரம் பேருந்து நிலையத்தில் 50க்கும் மேற்பட்ட அரசு பேருந்து ஓட்டுநர்கள் பேருந்துகளை ஆங்காங்கே நிறுத்திவிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தனியார் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி இந்த போராட்டம் நடத்தப்பட்டது. இந்த திடீர் போராட்டத்தால் காந்திபுரம் பகுதியில் பேருந்துக்காக காத்திருந்த பயணிகள் கடும் அவதியடைந்தனர்.