பாஜக கூட்டணி அரசை எதிர்க்க துணிவில்லாத எதிர்கட்சியாக புதுச்சேரியில் திமுக உள்ளது என சுயேட்சை எம்எல்ஏ விமர்சித்துள்ளார்.
புதுச்சேரி: புதுச்சேரி, உருளையன்பேட்டை தொகுதியின் சுயேச்சை எம்எல்ஏ நேரு என்கிற குப்புசாமி. இவர் மனிதநேய மக்கள் சேவை இயக்கத்தின் நிறுவனர் ஆவார். கடந்த 2011ஆம் ஆண்டில் முதலமைச்சர் ரங்கசாமி தலைமையிலான என்.ஆர்.காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு எம்எல்ஏ ஆனவர் இவர்.
அப்போது அரசு கொறடாவாக 5 ஆண்டு காலம் இருந்த நிலையில், அடுத்த தேர்தலில் அதே தொகுதியில் நின்று தோல்வியுற்றார். பின்னர், 2021ல் என்.ஆர்.காங்கிரசை விட்டு விலகி சுயேட்சையாக போட்டியிட்டு வென்ற நேரு, ரங்கசாமி முதலமைச்சராக வருவதற்கு ஆதரவளித்தார்.
ஆனால், முதல்வர் ரங்கசாமியை ஆதரித்தாலும் என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக கூட்டணி ஆட்சியின் தவறுகளை சுட்டிக்காட்டினார். இதற்கு சான்றாக, சமீபத்தில் புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவர் செல்வத்துக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர கடிதம் அளித்தார்.
இந்த நிலையில், இது தொடர்பாக பிரபல தனியார் நாளிதழிடம் பேசிய நேரு, “நான் ரங்கசாமிக்குத்தான் ஆதரவு அளிக்கிறேன். ஆளும் அரசுக்கு கிடையாது. பாஜகவுடன் என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி வைத்தது பிடிக்காமல்தான் நான் சுயேச்சையாக போட்டியிட்டேன்.
இதையும் படிங்க: சிறுத்தை புகுந்ததால் பரபரப்பு.. கோவை பாரதியார் பல்கலை.,க்கு விடுமுறை : தேடும் வனத்துறை!
தேர்தலில் வெற்றி பெற்ற ரங்கசாமி, கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அந்த நேரத்தில் பாஜகவைச் சேர்ந்த ஒருவரை முதலமைச்சராக்க சதி நடந்தது. அதற்கு சுயேச்சைகள் உள்ளிட்ட எம்எல்ஏக்கள் பலரும் ஆதரவு அளித்தனர்.
அந்த நேரத்தில் நான் ரங்கசாமிக்கு ஆதரவளித்து பாஜக முதலமைச்சர் வருவதைத் தடுத்தேன். நான் சேவை செய்யவே அரசியலுக்கு வந்தேன். ஆளும் அரசை எதிர்ப்பதால் எந்த வித ஆதாயமும் எனக்கு கிடையாது. தமிழகத்தில் திமுகவினர் பாஜகவை கடுமையாக எதிர்த்து அரசியல் செய்கின்றனர். ஆனால் இங்கு, பாஜக கூட்டணி அரசை எதிர்க்க துணிவில்லாத எதிர்கட்சியாக திமுக உள்ளது. இங்குள்ள ஆட்சிக்கு எதிர்க்கட்சி தான் முட்டுக்கொடுத்துக் கொண்டு நிற்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.