கண்ணை மறைத்த தூக்கம்… கார் பள்ளத்தில் கவிழ்ந்ததில் இரு சிறுமிகள் பலி ; துக்க நிகழ்வுக்கு சென்று விட்டு திரும்பிய போது சோகம்!

Author: Babu Lakshmanan
15 May 2023, 11:29 am

ராணிப்பேட்டை ; ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் அடுத்த பெல் அருகே சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இரு சிறுமிகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் முகமது சலீம். சிக்கன் விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவரது உறவினர் ஆந்திர மாநிலம் அனந்தபூர் பகுதியில் இறந்து விட்டதால், அந்த துக்க நிகழ்வில் பங்கேற்க உறவினர்களுடன் காரில் சென்றுள்ளார்.

துக்க நிகழ்வில் பங்கேற்று விட்டு மீண்டும் சென்னை திரும்பிய போது, சிப்காட் அருகே பெல் சாலையில், தூக்க கலக்கத்தால் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் சுமையா பாத்திமா(17), தபாசம் பாத்திமா(15) ஆகிய இரு சிறுமிகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், காரில் பயணித்த மூவர் லேசான காயமடைந்தனர். இதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மேலும், இந்த சம்பவம் குறித்து சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

துக்க நிகழ்வில் பங்கேற்று விட்டு மீண்டும் சொந்த ஊருக்கு திரும்பிய போது, கார் பள்ளத்தில் கவிழ்ந்து இரு சிறுமிகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ