வெடிகுண்டு வீசி பிரபல ரவுடி வெட்டிக்கொலை.. காஞ்சிபுரத்தில் பரபரப்பு சம்பவம்!
Author: Hariharasudhan11 March 2025, 4:06 pm
காஞ்சிபுரத்தில் நாட்டு வெடிகுண்டு வீசி பிரபல ரவுடி வசூல் ராஜாவை கொலை செய்த மர்ம கும்பலை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட திருக்காலிமேடு பகுதியைச் சேர்ந்தவர் வசூல் ராஜா. இந்த ராஜா என்ற வசூல் ராஜா மீது 20க்கும் மேற்பட்ட கொலை, கொலை முயற்சி மற்றும் ஆள் கடத்தல் உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார் வசூல் ராஜா.
இதனையடுத்து, அவரது வீட்டின் அருகில் பதுங்கி இருந்த மர்ம நபர்கள் 5 பேர் கொண்ட கும்பல், நாட்டு வெடிகுண்டு வீசி கொலை செய்துவிட்டு தப்பி ஓடியுள்ளனர். இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து விஷ்ணு காஞ்சி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
யார் இந்த ரவுடி வசூல் ராஜா? துவக்கத்தில் வசூல் ராஜா சிறுசிறு குற்றங்களில் ஈடுபடுவதை வழக்கமாக வைத்து வந்துள்ளார். ஆனால், கடந்த 2009ஆம் ஆண்டு ஜோசப் மற்றும் அவரது நண்பர் இருவரை கொலை செய்து பிரபலமாகி உள்ளார். இதனைத் தொடர்ந்து, 2011ஆம் ஆண்டு காஞ்சிபுரம் பொய்யாக்குளம் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ராஜா என்பவரையும் கொலை செய்ததை தொடர்ந்து, ரவுடிகள் மத்தியில் வசூல் ராஜாவிற்கு தனிப் பெயர் வரத் தொடங்கியுள்ளது.
மேலும், வசூல் ராஜா திரைப்படம் வெளியானபோது, வட்டிக்கு விடும் தொழிலில் ராஜா ஈடுபட்டு வந்துள்ளார். இதனைத் தொடர்ந்து, தனது பெயரை வசூல் ராஜா என மாற்றிக் கொண்டுள்ளார். வசூல் ராஜா என்ற பெயருக்கு ஏற்றார்போலவே, கடனை வசூல் செய்து கொடுப்பதிலும் வல்லவராக இருந்து வந்துள்ளார்.
முக்கியமாக, ஒருவரைக் கொலை செய்ய வேண்டும் என ராஜா முடிவெடுத்துவிட்டால், அந்த நபரை நோட்டமிட்டு, அவருக்கு நெருக்கமானவர்களை விலைக்கு வாங்கி விடுவாராம். அதன் பிறகு, அந்த நபரை முழு போதை ஆக்கிவிடுவாராம். அதன் பிறகு போதையில் இருக்கும் நபரை எளிதாக கொலை செய்துவிட்டுச் செல்லும் பழக்கத்தை வைத்திருந்துள்ளார்.
இதையும் படிங்க: என் கணவருக்கு மட்டும் ஏன் இப்படி? தொடர்ந்து தென்னிந்திய சினிமா மீது ஜோதிகா தாக்கு!
இந்த நிலையில், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு வசூல் ராஜா திருந்தி வாழ முடிவெடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து, வழக்குகளில் சரண்டர் ஆகி வழக்குகளை முடிப்பதில் ராஜா கவனம் செலுத்தி வந்ததாகவும் தெரிகிறது. அதேபோன்று, ராஜா வேலூர் மற்றும் ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளிலும் தலைமறைவாக இருந்து வந்துள்ளார்.
இந்த நிலையில் தான் இந்த கொலைச் சம்பவம் நடந்தேறி உள்ளது. பழைய கொலை சம்பவத்திற்கு பழி வாங்குவதற்காக இந்தக் கொலை நடைபெற்றதா ? அல்லது தொழில் போட்டி காரணமாக கொலை நடைபெற்றதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.