ஈமு கோழிப் பண்ணை அமைத்து தருவதாக ரூ.3.95 கோடி மோசடி : தம்பதிக்கு 10 ஆண்டு சிறையுடன் ரூ.2.44 கோடி அபராதம்!!

Author: Udayachandran RadhaKrishnan
11 February 2022, 3:58 pm

ஈரோட்டில் ஈமு கோழி பண்ணை அமைத்து தருவதாக கூறி 3 கோடியே 95 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக தம்பதிகளுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை மற்றும் 2 கோடியே 44 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து கோவை முதலீட்டாளர்கள் பாதுகாப்பு சட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த முனியன் மற்றும் அவரது மனைவி மாரியம்மாள் ஆகியோர் கடந்த 2012ம் ஆண்டு ஸ்ரீ நித்யா ஈமு மற்றும் பவுல்டிரி பார்ம்ஸ் என்ற நிறுவனத்தை துவங்கி ஈமு கோடி பண்ணை அமைத்து தருவதாக விளம்பரம் செய்தனர்.

இதனை நம்பி 244 பேர் இவர்களிடம் பணம் செலுத்தியிருந்தனர். ஆனால் அவர்களுக்கு ஈமு பண்ணைகள் அமைத்து தராத நிலையில், நாட்டுக்கோழி பண்ணை அமைத்து தருவதாகவும் கூறி பணத்தை பெற்று மோசடி செய்துள்ளனர்.
சுமார் 3 கோடியே 95 லட்சத்து 72 ஆயிரம் ரூபாய் அளவிற்கு மோசடி செய்ததாக முதலீட்டாளர்கள் அளித்த புகாரின் பேரில், ஈரோடு மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

தொடர்ந்து முனியன், மாரியம்மாள், உட்பட 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு கோவையில் உள்ள முதலீட்டாளர்கள் நலன் பாதுகாப்பு சட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், நீதிபதி ஏ.எஸ்.ரவி இன்று தீர்ப்பளித்தார்.

அதில், முனியன், மாரியம்மாள் ஆகிய இருவருக்கும் தலா 10 ஆண்டு சிறை தண்டனையும், 2 கோடியே 44 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேரை விடுதலை செய்து உத்தரவிட்ட நீதிபதி, அபராத தொகையை 222 முதலீட்டாளர்களுக்கு திரும்ப அளிக்கவும் உத்தரவிட்டார்.

  • Jana Nayakan Vijay ஜனநாயகன் கடைசி படம் அல்ல… சம்பவம் LOADING : இயக்குநரின் மாஸ் அறிவிப்பு!