ஆவின் பால் நிலையத்தை வாடகைக்கு விட்ட திமுக பிரமுகர்… கடையை பூட்டி சீல் வைத்த அதிகாரிகள்!!
Author: Babu Lakshmanan21 February 2024, 2:26 pm
ஆத்தூர் அருகே கெங்கவல்லியில் உரிய அனுமதியின்றி அரசு ஆவின் பால் நிலையத்தை திமுக பிரமுகர் தனியாருக்கு வாடைக்கு விட்டதால் கடையை பூட்டி அதிகாரிகள் சீல் வைத்தனர்.
சேலம் மாவட்டம் கெங்கவல்லி பேரூராட்சி அலுவலகம் அருகே பேரூராட்சிக்கு சொந்தமான இடத்தில் அரசு ஆவில் பால் நிலையத்தை மாற்றுத்திறனாளி சுரேஷ் என்பவர் நடத்தி வந்துள்ளார். இதனிடையே, ஆவின் பால் நிலையத்தில் உரிய வருமானம் இல்லாததால், பால் நிலையத்தை திரும்ப அதிகாரிகளிடம் ஒப்படைத்து விட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக பூட்டியே கிடந்த ஆவின் பால் நிலையத்தை அரசு அனுமதியின்றி தன்னிச்சையாக திமுக நகர செயலாளர் பாலமுருகன் என்பவர், கடைக்கு அட்வான்ஸ் தொகையை பெற்று கொண்டு தனியாருக்கு மாத 5 ஆயிரம் ரூபாய் வீதம் வாடகைக்கு விட்டதாக கூறப்படுகிறது.
அதன்படி, ஆவின் பால் நிலையத்தை வாடகைக்கு எடுத்த தனி நபர், ஆவின் பெயர் பலகைகளை மறைத்து விட்டு மைசூர் பில்டர் காபி என்ற பெயரில் கடை நடத்தி வந்துள்ளார். இதுகுறித்து அப்பகுதி மக்கள் மாவட்ட ஆவின் அதிகாரிகளுக்கும் முதலமைச்சர் தனிப்பிரிவிற்கும் பலமுறை புகார் தெரிவித்துள்ளனர்.
இந்த புகாரின் பேரில் சேலம் மாவட்ட ஆவின் வருவாய் அலுவலர் மற்றும் பொது மேலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கெங்கவல்லி திமுக, நகர செயலாளர் பாலமுருகன் என்பவர் திருமுருகனிடம் அட்வான்ஸ் தொகையை பெற்றுக் கொண்டு, ஆவின் பால் நிலையத்தை மாதம் 5 ஆயிரம் ரூபாய் வீதம் வாடகைக்கு விட்டுள்ளது தெரியவந்தது.
இதனையடுத்து, ஆவின் அதிகாரிகள் பேரூராட்சி அதிகாரிகள் முன்னிலையில் கடையை பூட்டி சீல் வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.