பிரதமர் மோடி பதவி விலகல்? தேசிய களத்தில் சூடுபிடித்த முக்கிய கருத்து.. பாஜக நிலைப்பாடு என்ன?
Author: Hariharasudhan31 March 2025, 3:10 pm
பிரதமர் மோடி தனது ஓய்வு அறிவிப்பை வெளியிடுவதற்காகவே ஆர்எஸ்எஸ் தலைமையகத்துக்குச் சென்றதாக சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.
மும்பை: உத்தவ் பிரிவு சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் இன்று மும்பையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “பிரதமர் நரேந்திர மோடி ஆர்எஸ்எஸ் தலைமையகம் வந்ததற்குப் பின்னால் ஒரு காரணம் இருக்கிறது. வழக்கமாக, ஆர்எஸ்எஸ் அமைப்பில் என்ன விவாதங்கள் நடந்தாலும், அது மூடிய கதவுகளுக்குப் பின்னாலேதான் நடக்கும்.
ஆனால், தற்போது சில அறிகுறிகள் தென்படுகின்றன. பிரதமர் மோடி தனது ஓய்வு அறிவிப்பை வெளியிடுவதற்காகவே ஆர்எஸ்எஸ் தலைமையகத்துக்குச் சென்றுள்ளார். எனக்கு தெரிந்தவரை, அவர் 10 முத 11 ஆண்டுகளில் ஒருபோதும் ஆர்எஸ்எஸ் தலைமையகத்திற்குச் சென்றதில்லை. தலைமை மாற்றத்தை ஆர்எஸ்எஸ் விரும்புகிறது. மோடி, தனது பதவியில் இருந்து வெளியேறுகிறார்” எனத் தெரிவித்தார்.
சஞ்சய் ராவத்தின் இந்தக் கருத்தை மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் மறுத்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், “2029ம் ஆண்டிலும் நரேந்திர மோடியையே பிரதமராக நாடு பார்க்கிறது. அதில் எந்தவித மாற்றமும் ஏற்பட வாய்ப்பில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, நேற்று (மார்ச் 30) நாக்பூரில் உள்ள ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்கத்தின் தலைமையகத்திற்குச் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, ஆர்எஸ்எஸ் நிறுவனர் கேசவ பலிராம் ஹெட்கேவருக்கும், ஆர்எஸ்எஸ் இரண்டாம் சர்சங்கசாலக் மாதவ சதாசிவ கோல்வால்கருக்கும் அஞ்சலி செலுத்தினார்.
இதையும் படிங்க: கடலூரில் செட் போட்டு கள்ளநோட்டு அச்சடிப்பு.. விசிக நிர்வாகி அதிரடி நீக்கம்!
இதன் பின்னர் பேசிய அவர், ஆர்எஸ்எஸ் இந்தியாவின் அழியாத கலாசாரம் மற்றும் நவீனமயமாக்கலின் ஆலமரம் எனத் தெரிவித்தார். மேலும், 75 வயதுக்கு மேற்பட்ட தலைவர்கள், இளைய தலைவர்களிடம் பொறுப்புகளை ஒப்படைத்து ஒதுங்கிச் செல்ல வேண்டும் என்பது பாஜகவில் எழுதப்படாத விதியாக உள்ள நிலையில், மோடிக்கும் 75 ஆகப்போகிறது என்பதும், எடியூரப்பா போன்றோர் இதற்கு விதிவிலக்காக உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.