காங்கிரஸ் தலைவரும், காவல் ஆணையரும் காரணமா? வீட்டினுள் மலம்.. சவுக்கு சங்கர் பரபரப்பு குற்றச்சாட்டு!

Author: Hariharasudhan
24 March 2025, 4:58 pm

பிரபல ஊடகவியலாளர் சவுக்கு சங்கரின் வீட்டில் கழிவுகள் கொட்டப்பட்ட சம்பவத்திற்கு சென்னை காவல் ஆணையர் காரணம் என குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னை: பிரபல அரசியல் விமர்சகரும், ஊடகவியலாளருமானவர் சவுக்கு சங்கர். இந்த நிலையில், சென்னையில் உள்ள இவரது வீட்டில் தூய்மைப் பணியாளர்கள் உடை அணிந்தவாறு புகுந்த சிலர், சாக்கடையைக் கொட்டிவிட்டுச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், இது குறித்து தனியார் செய்தி தொலைக்காட்சியிடம் பேசிய சவுக்கு சங்கர், “எனது வீட்டின் அனைத்துப் பகுதிகளிலும் சாக்கடை, மலத்தைக் கொட்டிவிட்டுச் சென்றுள்ளனர். நான் தூய்மைப் பணியாளர்களுக்கு எதிராக எதுவும் பேசவில்லை. அவர்களுக்கு வாங்கித் தர வேண்டிய வாகனங்கள் விவகாரத்தில், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட சிலர் ஊழல் செய்திருப்பதாக பேசியிருந்தேன்.

இவ்வாறு இங்கு வந்து இப்படி தாக்குதலில் ஈடுபட்டிருப்பது, சென்னை மாநகர காவல் ஆணையரின் உத்தரவின்படி தான் நடந்துள்ளது. என்னுடைய அம்மாவின் மொபைலையும் பிடுங்கி, அதில் வீடியோ கால் செய்து என்னையும், என்னுடைய அம்மாவையும் அவதூறாகப் பேசினர்.

Savukku Shankar House attack

தற்போது, நான் இருக்கும் இந்த வீட்டிற்கு மூன்று மாதங்களுக்கு முன்பு நான் வந்தேன். இந்த வீட்டில்தான் நான் இருக்கிறேன் என்பது காவல்துறை தவிர்த்து, வேறு யாருக்கும் தெரியாது. சென்னை மாநகர ஆணையர் அருண் சொன்னதன் பேரில்தான் தூய்மைத் தொழிலாளர்களை அழைத்து வந்து என் வீட்டை போலீசே காட்டியுள்ளனர்” என பரபரப்பாக குற்றம் சாட்டினார்.

இந்த நிலையில், இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, “ஊடகவியலாளர் சவுக்கு சங்கர் வீட்டில் இன்று (24.3.2025) காலை, அவரது தாயார் தனியாக இருந்தபோது, 50 பேர் கொண்ட கும்பல் வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்து சில பொருட்களை எடுத்துச் சென்றதுடன், படுக்கையறை, சமையல் அறை, சமையல் பொருட்கள் என்று அனைத்துப் பொருட்களின் மீதும் சாக்கடையையும், மலத்தையும் கொட்டி உள்ளார்கள் என்ற செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுபோன்ற கீழ்த்தரமான செயல் மற்றும் தாக்குதல் கண்டனத்திற்குரியது. ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையுள்ள யாரும் இதை சகித்துக்கொள்ள மாட்டார்கள். உண்மையில் இந்தச் சம்பவம் கொடுமையின் உச்சம்; அராஜகத்தின் வெளிப்பாடு. சட்டத்தின் ஆட்சி நடக்கிறது என்று கூறிக்கொள்ளும் விடியா திமுகவின் ஸ்டாலின்
மாடல் ஆட்சியில் இப்படிப்பட்ட சம்பவம் நடந்தேறியது, மனசாட்சியுள்ள அனைவரும் தலைகுனிந்து வெட்கப்பட வேண்டிய ஒரு சம்பவமாகும்.

இந்தக் கொடுமையான செயலை செய்த கும்பலையும், பின்னணியில் உள்ள அனைவரையும் சட்டத்தின் முன்பு நிறுத்தி கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். சட்டப்படி நடவடிக்கை எடுக்க தவறும்பட்சத்தில், அதிமுக பதவியேற்றவுடன், தூய்மைப் பணியாளர்கள் போர்வையில் இந்தக் குற்றச் செயலில் ஈடுபட்டவர்கள், பின்னணியில் உள்ளவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுத்து தண்டிக்கப்படுவார்கள் என்று எச்சரிக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

அதேபோல், தமிழக பாஜக தலைவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “திமுக ஆட்சியின் ஊழலையும், சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற முடியாத கையாலாகாத்தனத்தையும் குறித்துப் பேசுபவர்கள் மீது, வழக்கு தொடர்வது, நள்ளிரவில் காவல்துறையினரை அனுப்பி மிரட்டுவது, குண்டாஸ் வழக்கில் கைது செய்வதென தொடர்ந்து அராஜகப் போக்கில் ஈடுபட்டு வருகிறது திமுக அரசு.

இதையும் படிங்க: நீ யாரு..என்ன கேள்வி கேட்க..செய்தியாளர்களை கடிந்து கொண்ட சல்மான் கான்.!

திமுக அரசு ஊழல் செய்திருக்கிறது என்பதைக் கூறியதற்காக, சவுக்கு சங்கர் மீது நடத்தப்படும் இந்த வன்முறையைக் கடுமையாகக் கண்டிக்கிறோம். ஒருவர் வீட்டினுள் அத்துமீறி நுழைந்து, சுமார் மூன்று மணி நேரம் கடந்தும், காவல்துறை இன்னும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால், யாருடைய தூண்டுதலின் பெயரில் இது நடக்கிறது என்பதை உணர முடிகிறது.

ஆட்சியாளர்களின் இந்த அராஜகப் போக்கு தொடர்வது நல்லதல்ல. இதன் பின்னணியில் இருப்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

  • Bharathiraja son Manoj death பெரும் சோகத்தில் ‘பாரதிராஜா’ குடும்பம்…கண்ணீரில் திரையுலகம்.!
  • Leave a Reply