பள்ளி மாணவனுக்கு மது வாங்கி கொடுத்த 8ஆம் வகுப்பு மாணவன்… கண்மூடித்தனமாக தாக்கிய இளைஞர்கள்!
Author: Udayachandran RadhaKrishnan29 November 2024, 10:33 am
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அருகே உள்ள நடுப்பையூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 10ம் வகுப்பு மாணவன் மதுபாட்டில் வாங்கி கேட்டதின் அடிப்படையில் அதே பள்ளியில் 8ம் வகுப்பு படிக்கும் மாணவன் கடந்த 16ம் தேதி மதுபாட்டிலும் முட்டையும் வாங்கி கொடுத்து உள்ளார்.
இது குறித்த தகவல் அதே பகுதியை சேர்ந்த இளம்பருதி (24), சுபாஷ் (30), இளஞ்சூரியன் (24), மனோ (24) ஆகிய நான்கு இளைஞர்களுக்கு தெரியவந்துள்ளது.
இதனை அடுத்த அந்த நான்கு இளைஞர்களும் பள்ளி மைதானத்தில் விளையாடி கொண்டிருந்த 8ம் வகுப்பு மாணவனை கண்டிப்பதாக நினைத்து கடுமையாக தாக்கினர்.

மேலும் யாருக்கு மது வாங்கி கொடுத்தாய் என கேட்டும் பள்ளி மாணவர்களுக்கு மது வாங்கி கொடுத்து கெடுக்கிறாய் என கூறியும் கடுமையாக தாக்கி எட்டி உதைத்து அதனை வீடியோவாக பதிவு செய்தனர்.
அந்த வீடியோ சமூக வலைதளத்தில் பரவிய நிலையில் சிறுவனின் தாயார் மகனை தாக்கிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காவேரிப்பட்டினம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதையும் படியுங்க: நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி.. மீண்டும் எகிறிய தங்கம் விலை!
சிறுவனின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் காவேரிப்பட்டினம் போலீசார் பள்ளி மாணவனை தாக்கிய இளம்பருதி, சுபாஷ், இளஞ்சூரியன், மனோ ஆகிய நான்கு பேரின் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
தொடர்ந்து நான்கு பேரையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த நிலையில் நான்கு பேரும் நீதிமன்ற ஜாமினில் விடுதலை செய்யப்பட்டனர்.