அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்ட வழக்கு : நாளை வெளியாகிறது உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு!!
Author: Udayachandran RadhaKrishnan19 July 2022, 8:19 pm
அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டதற்கு எதிரான வழக்குகளில் சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்குகிறது.
சென்னையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் கடந்த 11-ந் தேதி எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. அ.தி.மு.க. அலுவலகத்திற்குள் கதவை உடைத்து தனது ஆதரவாளர்களுடன் ஒ.பன்னீர்செல்வம் நுழைந்தார்.
இருதரப்பினர் இடையே மீண்டும் மோதல் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டதால், வருவாய் துறை அதிகாரிகள் அ.தி.மு.க. அலுவலகத்துக்கு ‘சீல்’ வைத்தனர். மேலும் இதுதொடர்பாக ராயப்பேட்டை போலீசார் 3 வழக்குகள் பதிவு செய்துள்ளனர்.
14 பேர் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்தநிலையில், அதிமுக கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கலவரம் தொடர்பாக கைதான எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் 14 பேருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை எழும்பூர் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டதற்கு எதிராக ஈபிஎஸ்., ஓபிஎஸ் சார்பில் தொடரப்பட்ட வழக்கில் நாளை மதியம் 2.15 மணிக்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று சென்னை ஐகோர்ட்டு அறிவித்துள்ளது.
நாளை பிற்பகல் 2.15 மணிக்கு நீதிபதி சதீஷ்குமார் உத்தரவு பிறப்பிக்கிறார். ஜூலை 11-ம் தேதி அதிமுக பொதுக்குழு நடந்த சமயத்தில் தலைமை அலுவலகத்தில் மோதல் நடந்ததால் வருவாய்த்துறையினர் சீல் வைத்திருந்தனர்.