இது களையுதிர் காலம்.. எந்தக் கட்சியிலும் சேரவில்லையா? காளியம்மாள் களம் எப்படி?
Author: Hariharasudhan22 February 2025, 1:41 pm
நாம் தமிழர் கட்சியில் இருந்து காளியம்மாள் விலக உள்ளதாக தகவல் வெளியான நிலையில், இது நாதகவுக்கு களையுதிர் காலம் என சீமான் கூறியுள்ளார்.
மதுரை: நாகப்பட்டினத்தில் அடுத்த மாத, உறவுகள் சங்கமம் என்ற நிகழ்வு நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில், நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த காளியம்மாள் வாழ்த்துரை வழங்க உள்ளார். இதனிடையே, இந்த நிகழ்ச்சிக்கான அழைப்பிதழில் காளியம்மாளின் பெயருக்கு கீழ் சமூக செயற்பாட்டாளர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், அவர் தற்போது நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை மாநிலச் செயலாளர் பொறுப்பில் இருக்கிறார். ஆனால், கட்சிப் பொறுப்பை அழைப்பிதழில் குறிப்பிடாததால், அவர் கட்சியில் இருந்து விலக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இதுதொடர்பான அறிவிப்பை காளியம்மாள் இன்று வெளியிடுவார் என அவரே தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு கூறியுள்ளார்.
இந்த நிலையில், மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த சீமானிடம், காளியம்மாள் விலகல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த சீமான், “இலையுதிர் காலம் போன்று எங்கள் கட்சிக்கு இது களையுதிர் காலம். யார் வேண்டுமானாலும் கட்சியிலிருந்து செல்லலாம். அது அவர்களின் தனிப்பட்ட முடிவு.
கட்சியில் இருப்பதற்கும், விலகுவதற்கும் காளியாம்மாளுக்கு முழுச் சுதந்திரம் உள்ளது. காளியம்மாள் விலகினால் விலகட்டும், அவருக்கு வாழ்த்துகள். பக்கத்தில நிற்பவர் கூட நாளை வேறு ஒரு அமைப்புக்குப் போகலாம். வரும்போது வாங்க வாங்க, வணக்கம் என்போம். போகும்போது போங்க, ரொம்ப நன்றி, வாழ்த்துக்கள் எனச் சொல்வோம். இது எங்களுடைய கொள்கை” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: இந்தி மட்டும்தான் தெரியும்.. சூப்பில் மிதந்த பூச்சி.. கோவை ஹோட்டலில் பரபரப்பு!
இந்த நிலையில், ஒருவேளை காளியம்மாள் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகினால், அடுத்ததாக திமுகவிலோ அல்லது விஜயின் தமிழக வெற்றிக் கழகத்திலோ இணையலாம் எனக் கூறப்படுகிறது. இருப்பினும், கட்சியில் இருந்து விலகி சில காலங்களுக்கு சமூக செயற்பாட்டாளராகவே காளியம்மாள் பயணிக்கத் திட்டமிட்டு உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.