விஜயலட்சுமி 7 முறை கருக்கலைப்பு.. முடியவே முடியாது.. சீமானுக்கு சிக்கல்!
Author: Hariharasudhan22 February 2025, 5:56 pm
சீமானுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டு மிகவும் தீவிரமானது என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியின் விரிவான உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னை: நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரின் அடிப்படையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது, வளசரவாக்கம் போலீசார், கடந்த 2011ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தனர். இதனையடுத்து, இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி சீமான் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த மனு, சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு, கடந்த பிப்ரவரி 17ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, சீமான் மீதான பாலியல் வழக்கை ரத்து செய்ய முடியாது என மறுக்கப்பட்டது. மேலும், இந்த வழக்கில் 12 வாரத்துக்குள் இறுதி அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என போலீசாருக்கு உத்தரவிட்ட நீதிமன்றம், சீமான் மனுவை தள்ளுபடி செய்தது.
இந்த நிலையில், நீதிபதி ஜி.கே.இளந்திரையன் பிறப்பித்துள்ள விரிவான உத்தரவு வெளியாகியுள்ளது. அதில், “நடிகரும், இயக்குநரும், நாம் தமிழர் என்ற அரசியல் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராகவும் உள்ள சீமான் இயக்கிய படத்தில் நடிகை விஜயலட்சுமி நடித்துள்ளார்.
அதில் ஏற்பட்ட பழக்கத்தை அடுத்து, தனது குடும்ப பிரச்னைகளுக்குத் தீர்வு காண உதவி கேட்டு, சீமானை விஜயலட்சுமி நாடியுள்ளார். அப்போது, விஜயலட்சுமியை திருமணம் செய்து கொள்வதாக உத்தரவாதம் அளித்த சீமான், அவருடன் பாலியல் ரீதியாக உறவுகொண்டு திருமணத்துக்கு மறுத்தது மட்டுமல்லாமல், மிரட்டலும் விடுத்துள்ளார்.
அதன்பிறகே, சீமானுக்கு எதிராக அவர் போலீசில் பாலியல் புகார் அளித்துள்ளார். இதற்கு எதிராக சீமான் தரப்பில் இருதரப்பு சம்மதத்துடன் நடைபெறும் உறவு பாலியல் குற்றமாகாது என்றும், 2011ஆம் ஆண்டு அளித்த புகாரை விஜயலட்சுமி 2012ஆம் ஆண்டே வாபஸ் பெற்று விட்டதாகவும் வாதிடப்பட்டது.
ஆனால், அனைவரது முன்னிலையிலும் தன்னை திருமணம் செய்து கொள்வதாக சீமான் அளித்த உத்தரவாதத்தை நம்பியே அந்தப் புகாரை வாபஸ் பெற்றதாக விஜயலட்சுமி திருவள்ளூர் மகளிர் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார். அதேபோல், சீமானுக்கு எதிரான புகாரை வாபஸ் பெறுவதாக, வழக்கறிஞரிடம் விஜயலட்சுமி அளித்த கடிதமும், சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளருக்குச் சென்றடையவில்லை.
எனவே, அந்த வழக்கு முடித்து வைக்கப்படாமல் நிலுவையில் இருந்து வந்துள்ளது. இந்த வழக்கில் 15 சாட்சிகளிடம் போலீசார் வாக்குமூலம் பெற்றதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இருவருக்குமிடையே காதல் இல்லை. உதவி கேட்டுச் சென்றபோது திருமணம் செய்து கொள்வதாகக் கூறி, விஜயலட்சுமியிடம் சீமான் உறவு கொண்டுள்ளார்.
இதையும் படிங்க: டேக் டைவர்ஷன் எடுத்த தவெக.. விஜய் எம்.ஜி.ஆர் தான்.. கமலுடன் மல்லுக்கட்டு!
சீமான் பாலியல் ரீதியாக ஏமாற்றியதால், விஜயலட்சுமி சுமார் 7 முறை கருக்கலைப்பும் செய்துள்ளார். அதுமட்டுமின்றி, விஜயலட்சுமியிடம் இருந்து பெரும் தொகையையும் சீமான் பெற்றுள்ளார். மன உளைச்சல் மற்றும் மிரட்டல் காரணமாகவே விஜயலட்சுமி புகாரை வாபஸ் பெறுவதாக கூறியுள்ளார்.
இந்த நிலையில், சீமானுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டு மிகவும் தீவிரமானது. இதில் புகாரை வாபஸ் பெற்றாலும் கூட, சமரசம் செய்துகொள்ள முடியாது. கடந்த 2023ஆம் ஆண்டு வரை இருவருக்குமிடையே ஏதோ ஒருவகையில் தொடர்பு இருந்து வந்துள்ளது. எனவே, சீமானுக்கு எதிரான பாலியல் வழக்கை ரத்து செய்ய முடியாது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.