கிளாம்பாக்கத்தில் வடமாநிலப் பெண்ணை ஆட்டோவில் கடத்தி பாலியல் சீண்டல்.. வலுக்கும் கண்டனம்!

Author: Hariharasudhan
5 February 2025, 11:50 am

கிளாம்பாக்கத்தில் பேருந்துக்காக காத்திருந்த இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த மூன்று பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

சென்னை: மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர் 19 வயது இளம்பெண். இவர், திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த தனது தோழியுடன் சேலத்தில் தங்கியுள்ளார். மேலும், இவரது மற்றொரு தோழி, சென்னை மாதவரத்தில் கணவருடன் தங்கியுள்ளார். ஆனால், இவரது கணவர் வேலைக்குச் சென்று விடுவதால், அவருக்கு உதவியாக இருக்க மேற்கு வங்கப் பெண் நேற்று முன்தினம் இரவு சென்னை வந்துள்ளார்.

இதனையடுத்து, இரவு 10 மணிக்கு கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தின் எதிரே மாதவரம் பேருந்துக்காக காத்திருந்துள்ளார். ஆனால், நீண்ட நேரம் ஆகியும் பேருந்து வரவில்லை எனத் தெரிகிறது. இதனிடையே, இதனைக் கவனித்து கொண்டிருந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவர், அந்தப் பெண்ணிடம் எங்கு செல்கிறீர்கள் எனக் கேட்டுள்ளார்.

அதற்கு, மாதவரம் என அப்பெண் கூறியுள்ளார். நானும் அங்குதான் செல்கிறேன் எனக் கூறி ஆட்டோ ஓட்டுநர் அழைத்துள்ளார். ஆனால், ஓட்டுநரின் மீது சந்தேகம் கொண்ட அப்பெண் வர மறுத்துள்ளார். ஆனால், அவரை ஆட்டோவில் ஏற வற்புறுத்தி, அவரையும், அவரின் உடமைகளையும் வலுக்கட்டமாகமாக ஏற்றி அழைத்துச் சென்றுள்ளார்.

Annamalai condemns Woman sexual torture in Kilambakkam

மேலும், வண்டலூர் மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் ஆட்டோ சென்றபோது, தனது நண்பர்களுக்கு போன் செய்து வரச் சொல்லியுள்ளார். இதன்படி, வண்டலூர் அருகே அதே ஆட்டோவில் வேறு இருவரும் ஏறியுள்ளனர். இதனையடுத்து, அவர்கள் அந்த இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

இவை எல்லாவற்றையும் எதிர்கொண்ட அப்பெண், தனது தோழிக்கு குறுஞ்செய்தி மூலம் தகவல் தெரிவித்துள்ளார். பின்னர், அவர் இது குறித்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு (100) தகவல் தெரிவித்துள்ளார். இதன்பேரில், உடனடியாக போலீசார், ஆட்டோவில் செல்லும் பெண்ணின் செல்போன் டவரைக் கண்காணித்து, ஆட்டோவை பின் தொடர்ந்து சென்றுள்ளனர்.

இவ்வாறு போலீசார் பின் தொடர்வதை அறிந்த ஆட்டோ ஓட்டுநர், மதுரவாயல் அருகே உள்ள மாதா கோயில் தெருவில், அந்தப் பெண்ணை கீழே இறக்கி விட்டுவிட்டு, ஆட்டோ ஓட்டுநர் உள்பட மூன்று பேரும் தப்பி ஓடியுள்ளனர். இதனையடுத்து, அப்பெண்ணை மீட்ட போலீசார், அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், தப்பியோடிய மூவரையும் சிசிடிவி கேமரா காட்சிகளின் அடிப்படையில், தீவிரமாகத் தேடி வருகின்றனர். மேலும், இந்தச் சம்பவம் குறித்து வண்டலூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: சிங்கக்குட்டியை பரிசாக அளித்த யூடியூபர்.. 5 நிமிடம் ‘அதை’ செய்யச் சொன்ன கோர்ட்!

இந்த நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டு உள்ள எக்ஸ் தளப் பதிவில், “தமிழ்நாடு முழுவதும் பாலியல் வன்கொடுமை ஒரு சர்வ சாதாரணமாகிவிட்டது. போதைப்பொருள் எளிதில் பெறக்கூடிய பொருளாக மாறியுள்ளது. இருப்பினும், கடந்த மூன்று ஆண்டுகளில், அதாவது 2022 மற்றும் 2024-க்கு இடையில், தமிழ்நாட்டில் NDPS வழக்குகளில் 1,122 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர்.

2021ஆம் ஆண்டில் மட்டும் NDPS வழக்குகளில் மொத்தம் 9,632 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் கஞ்சா மற்றும் மெத்தபெட்டமைன் விற்பனை அதிகரித்து வருகிறது, ஆனால், கைதுகள் மட்டும் குறைந்து வருவது எப்படி? போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்குச் சுதந்திரமாக செயல்படுவதற்காக அரசு வேண்டுமென்றே மெத்தனமாகிவிட்டதா? நமது சகோதரிகளுக்கு பாதுகாப்பான தெருக்களை அதிகாரிகள் உறுதி செய்வதற்கு முன்பாக, இன்னும் எத்தனை பேரை காவு கொடுக்க வேண்டும்?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

  • Pavithra Lokesh husband controversy 60 வயது நடிகருடன் காதலா…பண வெறியில் மனைவி…பிரபல நடிகையின் முதல் கணவர் ஓபன் டாக்..!
  • Leave a Reply