திருப்பூரில் திமுக அரசுக்கு எதிராக கடையடைப்பு போராட்டம்.. வெறிச்சோடிய கடைவீதி : மக்கள் அவதி!
Author: Udayachandran RadhaKrishnan18 December 2024, 10:36 am
திருப்பூர் மாநகராட்சி சொத்து வரி, குப்பை வரி என அனைத்து வித வரி உயர்வை ரத்து செய்ய கோரியும் வாடகைக்கு 18 சதவீத ஜிஎஸ்டி வரிவிதிப்பு என மக்களை நசுக்கும் மத்திய மாநில அரசுகளை கண்டித்து திருப்பூர் மாவட்டத்தில் இன்று மாபெரும் கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
வரி உயர்வுக்கு எதிர்ப்பு ; வணிகர்கள் கடையடைப்பு
காலை 6:00 மணி முதல் மாலை 6 மணி வரையிலும் ஒரு நாள் அடையாள கடையடைப்பு போராட்டம் மூலம் தங்கள் எதிர்ப்பை மதியம் மாநில அரசுகளுக்கு தெரியப்படுத்த அனைத்து வணிகர் சங்கங்களும் எதிர்க்கட்சிகளும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் முழுவதும் சுமார் 1 லட்சம் கடைகள் அடைக்கப்பட்டு ஏறத்தாழ 100 கோடி வர்த்தகம் பாதிக்கப்படும் என கூறப்படுகிறது . திருப்பூரில் மளிகை கடைகள், உணவகங்கள் பேக்கரி கடைகள், துணிக்கடைகள் நகைக் கடைகள் செல்போன் கடைகள், எலக்ட்ரிக், எலக்ட்ரான் கடைகள் ஸ்டேஷனரி என அனைத்து வித கடைகளும் அடைக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்க: சீக்கிரம் கிளம்புங்க.. மளமளவென குறைந்த தங்கம் விலை!
மேலும் இந்தியா முழுவதும் பின்னலாடைகளை அனுப்பி வைக்கும் காதர் பேட்டை முழுவதும் கடை அடைக்கப்பட்டுள்ளது இதன் காரணமாக 50 கோடி ரூபாய்க்கும் அதிகமான பனியன் ஆடைகள் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்கமும் இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளதால் 2000க்கும் மேற்பட்ட பனியன் நிறுவனங்கள் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளது. இந்தப் போராட்டத்திற்கு அதிமுக பாஜக கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும் ஆதரவு தெரிவித்து உள்ளது.