காதல் திருமணம் செய்த மகன்.. பெண் வீட்டார் துன்புறுத்தலால் தாய் தற்கொலை.. உதவாத போலீசார்!!

Author: Udayachandran RadhaKrishnan
16 June 2024, 8:02 pm
Karur
Quick Share

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே நங்கவரம் பேரூராட்சிக்கு உட்பட்ட கருப்பண்ண மேடு பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரின் தங்கை மல்லிகாவிற்கு ஹரி பிரசாத் என்ற மகனும் ரேணுகாதேவி என்ற மகளும் உள்ளனர்.

ஹரிபிரசாத் அதே ஊரைச் சேர்ந்த மனோரஞ்சனி என்கிற அபி என்பவரை கடந்த இரண்டு வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இதை பெண் வீட்டார் கண்டித்தும் வந்துள்ளனர். இதனால் ஹரி பிரசாத் கரூர் டெக்ஸ் நிறுவனத்தில் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார்.

இதனால் மல்லிகா மற்றும் அவரது உறவினர் மூலம் கடந்த 03ம் தேதி குளித்தலை காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார் எனினும் குளித்தலை காவல் துறையினர் எதிர்தாரருக்கு ஆதரவாக செயல்பட்டதாக கூறப்படுகிறது

அதன் பிறகு கடந்த 5ஆம் தேதி அன்று ஹரிபிரசாத் அபியும் காதல் திருமணம் செய்து கொண்டு திருப்பூர் காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த அபி குடும்பத்தார் அன்று முதல் ஹரி பிரசாத் வீட்டிற்கு சென்று அங்கிருந்த மல்லிகா மற்றும் அவரது கணவர் ராஜு ஆகிய இருவரையும் அடிக்கடி தகராறு செய்து அச்சுறுத்தி மிரட்டி வந்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து கடந்த 13ஆம் தேதி அன்று வீட்டில் இருந்த மல்லிகாவை, அபியின் குடும்பத்தார்கள் கன்னியம்மாள், ஜோதி, பிரேமா, சிரும்பாயி, லட்சுமி மற்றும் சிலருடன் சென்று நீங்கள் செத்தால் உன் மகன் இங்கே வருவான் என மல்லிகாவை அடித்து துன்புறுத்தியுள்ளனர்.

இதுகுறித்து மல்லிகா தம்பி பழனிச்சாமி அவசர எண் 100க்கு தகவல் தெரிவித்துள்ளார். இதுவரை எந்த போலீசாரும் வீட்டில் வந்து விசாரணையோ பாதுகாப்போ கொடுக்கவில்லை என மல்லிகா தம்பி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

அன்று முதல் மன வேதனையில் இருந்த மல்லிகா இன்று காலை 11 மணியளவில் வீட்டில் தனக்குத்தானே தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதை அறிந்த குளித்தலை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மல்லிகாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மல்லிகா தற்கொலைக்கு குளித்தலை காவல்துறையினர் முக்கிய காரணம் என மல்லிகா உறவினர்கள் திரண்டு வந்து குளித்தலை காவல் நிலையத்தில் இன்று புகார் மனு அளித்துள்ளனர்.

Views: - 118

0

0