உங்க அண்ணனா சொல்றேன்… நாங்குநேரி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவர் : அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்ட வீடியோ!!!

Author: Udayachandran RadhaKrishnan
11 August 2023, 9:17 pm
Anbil - Updatenews360
Quick Share

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் உள்ள பெருந்தெருவைச் சேர்ந்தவர்கள் முனியாண்டி – அம்பிகாபதி தம்பதி. கூலித் தொழிலாளிகளான இவர்களுக்கு 17 வயதில் சின்னதுரை என்ற மகனும், 14 வயதில் சந்திரா செல்வி என்ற குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில், சின்னத்துரை அப்பகுதியில் உள்ள அரசுப்பள்ளியில் படித்து வந்துள்ளனர்.

மாணவர்களுக்கிடையே ஜாதி ரீதியாக ஏற்பட்ட பிரச்னையில் சின்னத்துரை ஒரு வாரம் பள்ளிக்குச் செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். இதனையடுத்து, பள்ளி நிர்வாகத்தினர், சின்னதுரையின் பெற்றோரை தொடர்புகொண்டு பள்ளிக்கு அனுப்புமாறு கேட்டுக் கொண்டனர்.

இந்த நிலையில், பள்ளிக்குச் சென்ற சின்னத்துரையிடம் ஆசிரியர்கள் விசாரித்தபோது தன்னை சில மாணவர்கள் ஜாதி ரீதியாக கேலி, கிண்டல் செய்வதால் பள்ளிக்கு வர விரும்பவில்லை என தெரிவித்ததையடுத்து, இதைகேட்ட ஆசிரியர்கள் சம்பந்தப்பட்ட மாணவர்களை அழைத்து கண்டித்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், ஆத்திரமடைந்த அந்த மாணவர்கள் அடங்கிய கும்பல் இரவு 10 மணியளவில் சின்னதுரையின் வீட்டிற்குள் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் நுழைந்து சின்னதுரையை சரமாரியாக வெட்டிய நிலையில், தடுக்க முயன்ற சின்னத்திருக்கையின் தங்கையையும் வெட்டியுள்ளனர்.

இந்த தாக்குதலில் படுகாயமடைந்த சின்னத்துரை மற்றும் சந்திரா செல்வி இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக 6 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இந்த சம்பவம் குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், இந்த ஆண்டு வைக்கம் போராட்டம் 100 ஆண்டுகளை கடந்த ஆண்டு. மிகப்பெரிய ஆளுமைகள் எல்லாம் மனிதநேயம் குறித்து பேசியிருந்தனர். ஆனால், இந்த மனிதநேயம் என்பது கொரோனா காலகட்டத்தில் தான் பலருக்கு புரிந்தது.

மாணவர்களே நீங்கள் பள்ளிக்கூடத்திற்கு நீங்கள் போகும்போது, உங்களது புத்தியை கூர்மைபடுத்த வேண்டும் என்றுதான் நாங்கள் ஆசைப்படுகிறோம், உங்களை கூர்நோக்கு இல்லத்தில் சேர்க்க வேண்டும் என ஆசைப்படவில்லை. தாக்கப்பட்டுள்ள தம்பி மற்றும் தங்கை இருவரையும் பாதுகாப்பான ஒரு கல்வி நிறுவனத்தில் சேர்த்து படிக்க வைப்பேன். அது என்னுடைய கடமை.

உங்கள் அண்ணாக சொல்கிறேன். அனைவரையும் அரவணைத்து செல்லுங்கள்; இதுபோன்ற சம்பவம் இனியும் நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்; ஒரு அண்ணனாக மாணவர்களிடம் நான் வைக்கும் கோரிக்கை இதுதான் என தெரிவித்துள்ளார்.

Views: - 304

0

0