‘அப்ரூவல் கொடுக்க ரூ.3 லட்சம்’… முன்பணமாக ஒரு லட்சம் வாங்கிய தாசில்தார் ; லஞ்ச ஒழிப்புத்துறையால் கைது..!!
Author: Babu Lakshmanan6 October 2023, 1:02 pm
ராமநாதபுரம் மாவட்டத்தில் லஞ்சம் வாங்கிய ஆர்.எஸ். மங்கலம் தாசில்தார் ‘தென்னரசு’ லஞ்ச ஒழிப்பு துறை காவல் துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.
காரைக்குடி, அமராவதிபுதூர். மேலத்தெரு பகுதியைச் சேர்ந்த கருப்பையா என்பவர் ஆர்.எஸ் மங்கலம் பகுதியில் ரியல் எஸ்டேட் செய்து வரும் நிலையில், இவர் தனது நிலத்திற்கு பட்டா மாறுதல் சம்மந்தமாக, கடந்த 21ம் தேதி ஆர்.எஸ் மங்கலம் தாசில்தார் தென்னரசுவை அனுகியுள்ளார்.
பட்டா மாறுதலுக்காக மூன்று லட்ச ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். முதல் கட்டமாக, ஒரு லட்ச ரூபாய் கொடுக்க இருந்த நிலையில், கருப்பையா ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்புத்துறை துணை கண்காணிப்பாளர் ராமச்சந்திரனை சந்தித்து புகார் தெரிவித்துள்ளார்.
அவர்கள் கொடுத்த அறிவுரையின்படி ரசாயனம் தடவிய ரூபாய் ஒரு லட்சம் பணத்தை இன்று தாசில்தார் தென்னரசுவிடம் கொடுக்கும் போது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் தாசில்தாரை கைது செய்தனர். தற்போது அவரிடம் விசாரணை செய்து வருகின்றனர்.