டாஸ்மாக் கடையில் தகராறு… நடுரோட்டில் இருதரப்பினர் இடையே மோதல் ; ஈரோட்டில் பரபரப்பு!!
Author: Babu Lakshmanan14 May 2024, 8:47 pm
பள்ளிபாளையத்தில் அரசு மதுபான மதுக்கடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக இரண்டு தரப்பினர் நடு சாலையில் மோதிக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் திருச்செங்கோடு சாலையில் ஜீவா செட் என்ற பகுதியில் அரசு மதுபான கடை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த கடையில் மது குடித்துவிட்டு வெளியே வந்த உள்ளூர் பகுதியை சேர்ந்த இருவருக்கும், மற்றொரு தரப்பினருக்கும் மதுக்கடையிலேயே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனை அடுத்து மதுக்கடையில் இருந்து வெளியே வந்தவர்களிடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், ஜீவா செட் என்ற பகுதி அருகே வாக்குவாதம் முற்றி ஒருவருக்கு ஒருவர் தாக்கிக் கொள்ளும் சூழல் ஏற்பட்டது. இதனை அடுத்து இரண்டு தரப்பை சேர்ந்தவர்களும், தங்கள் தரப்பு ஆட்களை அதிகளவு சேர்த்துக் கொண்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதனை அடுத்து அங்கு இருந்தவர்கள் பள்ளிபாளையம் போலீசாருக்கு இது குறித்து தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பள்ளிபாளையம் போலீசார் தகராறில் ஈடுபட்டவர்களை பள்ளிபாளையம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் படிக்க: 2047ல் இந்தியா வளர்ந்த நாடாக இதுதான் வழி… இன்னும் நிறை கற்றுக்க வேண்டும் ; VIT விஸ்வநாதன் சொல்லும் அறிவுரை!
முன்னதாக மது போதையில் இருந்த ஆசாமி ஒருவர் ஜீவா செட் பகுதியில், சட்ட விரோத செயல்பாடுகள் நடப்பதாகவும், கஞ்சா, போதை மாத்திரை உள்ளிட்டவை எளிதாக கிடைப்பதாகவும், இதுகுறித்து போலீசார் எவ்வித நடவடிக்கை எடுப்பதில்லை. தெரிந்தும் தெரியாதது போல அமைதியாக இருக்கிறார்கள் என மது போதையில், ஏக வசனத்தில் பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதன் காரணமாக அந்த பகுதியில் பெரும் பரபரப்பான சூழல் காணப்பட்டது. மேலும், பெரும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
தொடர்ந்து இந்த விவகாரம் குறித்து பள்ளிபாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் ஜீவா செட் பகுதியில் செயல்படும் அரசு மதுபான கடையில், அடிக்கடி தகராறு ஏற்படுவது, ஒருவரை ஒருவர் தாக்கி கொள்வது போன்ற தகாத சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவதால், அரசு மதுபான கடையை வேறு ஒரு இடத்திற்கு மாற்றி அமைக்க வேண்டும் என்பது அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கையாக உள்ளது.