எல்லாரும் என்ன மன்னிச்சுடுங்க… விளையாட்டாக சமூக வலைதளங்களில் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் வெளியிட்ட வாலிபர் : மறுநாள் எடுத்த விபரீத முடிவு!!

Author: Udayachandran RadhaKrishnan
9 June 2022, 1:59 pm

கோவை : சமூக வலைதளத்தில் கண்ணீர் அஞ்சலி அறிவிப்பு வெளியிட்டு மறுநாள் விஷம் அருந்தி உயிரை மாய்த்த வாலிபரின் செயல் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேட்டுப்பாளையம் அருகே உள்ள தென்பொன்முடி பகுதியைச் சேர்ந்தவர் சுரேந்தர் (வயது 28). திருமணம் ஆகவில்லை. மேட்டுப்பாளையத்தில் உள்ள ஒரு ஸ்டுடியோவில் போட்டோ கிராபராக வேலை பார்த்து வந்தார்.

இவர் கடந்த 6-ந் தேதி தனது புகைப்படத்துடன் கண்ணீர் அஞ்சலி என அறிவிப்பு வெளியிட்டு பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப்பில் பரப்பினார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பலர் அவரை செல்போனில் தொடர்பு கொண்டனர். அதற்கு சுரேந்தர், விளையாட்டாக அப்படி செய்ததாக கூறி சமாளித்தார்.

இதற்காக நண்பர்களும், உறவினர்களும் சுரேந்தரை கண்டித்து இதுபோல் நடந்து கொள்ளக்கூடாது என அறிவுரைகள் வழங்கினர்.

இந்தநிலையில் இன்று காலை காரமடை அருகே உள்ள குட்டையூர் மாதேஸ்வரன் கோவிலுக்கு சுரேந்தர் சென்றார். அங்கு விஷம் குடித்து விட்டு தனது குடும்பத்தினருக்கு செல்போனில் தகவல் தெரிவித்தார். குடும்பத்தினர் விரைந்து சென்று அவரை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுரேந்தர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து காரமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சுரேந்தர் தற்கொலைக்கான காரணம் என்ன, காதல் விவகாரமா, அல்லது வேறு எதுவும் பிரச்சினையா என்பது பற்றி விசாரித்து வருகிறார்கள்.

  • ajith kumar receive padma bhushan award from president நீங்க வேற மாதிரி சார்…நாட்டின் உயரிய விருதை பெற்றுக்கொண்டார் அஜித்!