சாக்கடை தொட்டியில் விழுந்ததால் நடக்கும் திறனை இழந்த சிறுவன்… தோளில் சுமந்தே வந்து ஆட்சியரிடம் உதவி கோரிய தாய்..!!
Author: Babu Lakshmanan19 September 2022, 9:24 pm
கோவை மாநகராட்சி பாதாளச் சாக்கடை தொட்டியில் விழுந்ததால் நிரந்தரமாக நடக்க முடியாத நிலையில் உள்ள சிறுவனுக்கு உரிய சிகிச்சையளிக்க உதவி செய்யக் கோரி சிறுவனின் தாய் ஆட்சியரை நேரில் சந்தித்து முறையிட்டார்.
கோவை உக்கடம் புல்லுக்காடு பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் இவரது மனைவி கார்த்திகா. இவர்களுக்கு 11 வயதில் ஒரு மகன் மற்றும் 13 வயதில் மகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு தடாகம் சாலை பால்கம்பனி பகுதியில் வசித்து வந்த போது, மகன் ஶ்ரீகுமார் மூடாமல் இருந்த மாநகராட்சி பாதாள சாக்கடை தொட்டியில் தவறி விழுந்தார்.
அப்போது சிறுவனுக்கு காலில் அடிபட்டு சிகிச்சை பெற்று வந்தார். அதனை தொடர்ந்து நீண்ட நாட்களுக்கு பின் நடக்க முடியாமல் நடந்து வந்த சிறுவன் ஶ்ரீகுமார் கடந்த சில ஆண்டுகளாக நடக்கவே முடியாத நிலைக்கு தள்ளப்பட்டார். இதனால், பல்வேறு தனியார் மருத்துவமனை, அரசு மருத்துவமனை, சித்தா உள்ளிட்ட சிகிச்சைகளை பெற்று வந்தார்.
கடந்த 4 மாதங்களுக்கு முன் சிறுவனின் தந்தை விஜயகுமார் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இதனால் மிகுந்த சிரமத்துடன் சிறுவன் ஶ்ரீகுமாரை சுமந்தவாறு தாய் கார்த்திகா மருத்துவமனைக்கு சென்று வருகிறார். இதனிடையே சிறுவனுக்கு மரபனு பாதிப்பு உள்ளதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இந்நிலையில் இன்று ஆட்சியர் அலுவலகத்திறகு வந்த கார்த்திகா ஆட்சியரை நேரில் சந்தித்து பிரச்சனையை கூறி உதவ கோரினார். உடனடியாக ஆட்சியர் சிறுவன் பிரச்சனை தொடர்பான சிறப்பு மருத்துவரை சந்திக்க ஏற்பாடுகளை செய்தார். மேலும் உரிய சிகிச்சைக்கான நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார்.