ஏரி ஆக்கிரமித்ததாக கூறி தந்தை செய்த செயல்… 60 கி.மீ சைக்கிளில் மகளுடன் சென்று அரங்கேற்றிய நாடகம் : இறுதியில் மாணவிக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

Author: Udayachandran RadhaKrishnan
3 August 2022, 6:16 pm

தான் ஆக்கிரமித்த ஏரி பகுதியை வேறு யாரும் அனுபவிக்க கூடாது என்பதற்காக தன் மகளையே 60 கிலோ மீட்டர் சைக்கிள் ஓட்ட வைத்து புகார் அளிக்க வந்த மாணவியிடம் உண்மை நிலையை புரிய வைத்த அதிகாரியின் வீடியோ வைரலாகி வருகிறது.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த மேல்மலையனூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட அன்னப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த 7-ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி சிறுமி செம்மொழி என்பவர் அன்னப்பள்ளம் கிராமத்தில் உள்ள ஏரி நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி மேல்மலையனூர் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்த நிலையில் அன்னப்பள்ளம் கிராமத்திலிருந்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மிதிவண்டி மூலம் பயணம் செய்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க திட்டமிட்டு அவரது தந்தை புவனேஷ் உடன் சமூக ஆர்வலர்களும் இணைந்து அன்னப்பள்ளம் கிராமத்தில் உள்ள 7 ஏக்கர் அளவுள்ள ஏரியில் 5 ஏக்கர் ஏரியை ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளதாக பதாகைகளை ஏந்தியும் 7-ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி சிறுமி செம்மொழி 60 கிலோமீட்டர் தூரம் மிதிவண்டி பயணம் மேற்கொண்டு விழுப்புரம் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க புறப்பட்டார்.

இந்த செய்தி அனைத்து சமூக ஊடகங்களிலும் பரவியது. அவர் விழுப்புரம் மாவட்ட ஆட்சி தலைவரை சந்தித்து மனு கொடுக்க மதியம் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த சிறுமி மற்றும் அவரது தந்தை புவனேஷ் மற்றும் சமூக ஆர்வலர்கள் மாவட்ட ஆட்சியர் இல்லாததால் அவரின் நேர்முக உதவியாளரிடம் புகார் மனு அளித்தனர்.

அப்போது பதில் அளித்த மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் அந்த ஏரி அக்கிரமிப்புகளை செய்தது முதலில் உன் தந்தை தான் அதன் பிறகு தான் அனைவரும் செய்துள்ளனர்.

இதன் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு உன் தந்தை ஆக்கிரமிப்பு செய்து வைத்திருந்த கோழி பண்ணையையும் சேர்த்து அனைத்து ஆக்கிரமிப்புகளும் அகற்றப்பட்டு விட்டது என்று கூறியதை அடுத்து அங்கிருந்து கீழே வந்த செம்மொழியின் தந்தை என்ன நடந்தது என்று செய்தியாளர்கள் கேட்கும் போது முன்னுக்குப் பின் பதிலளித்தார்.

எங்களை திசை திருப்பவே இதுபோன்று குற்றச்சாட்டுகளை வைக்கிறார்கள் என்றும் அங்கு நான் கோழி பண்ணை வைத்திருக்கவில்லை கோழி கூண்டு மட்டும் தான் வைத்திருக்கிறேன் என்று மழுப்பலான பதிலை கூறியதோடு தவளை தன் வாயால் கெடும் என்பது போல பேட்டி கொடுத்தார்.


நமக்கு கிடைக்காதது வேறு யாருக்கும் கிடைக்கக்கூடாது என்ற கோபத்தில் சமூக ஆர்வலர்களுடன் சேர்ந்து ஒரு சிறுமியை 60 கிலோ மீட்டர் தூரம் சைக்கிளை ஓட்டி வர செய்தது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முகசுளிப்பை ஏற்படுத்தியது. இதுபோன்று தவறான வழிகாட்டுதலால் மாணவர்களின் மனநிலையும் தவறான வழியில் செல்லும் என்பதற்கு இதுவே உதாரணம்.

  • Madhavan on social media impact குழந்தைகளை பார்க்கவே பயமாக உள்ளது…நடிகர் மாதவன் வேதனை.!