விண்ணை பிளந்த பாரத் மாதா கி ஜே கோஷம் : முத்துப்பேட்டையில் தொடங்கியது பிரம்மாண்ட விநாயகர் சிலை ஊர்வலம் : 3 ஆயிரம் போலீசார் குவிப்பு…!!
Author: Udayachandran RadhaKrishnan6 September 2022, 7:11 pm
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் ஆண்டுதோறும் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தியையொட்டி நடத்தப்படும் விநாயகர் ஊர்வலம் நடத்தப்படுகிறது.
தமிழகத்தில் முக்கியத்துவம் வாய்ந்த விநாயகர் சிலை ஊர்வலமாக இந்து முன்னணி இந்த ஊர்வலத்தை நடத்துகிறது. நேற்று ஜாம்பவானோடை சிவன் கோயில் அருகில் இருந்து விநாயகர் ஊர்வலம் தொடங்கியது.
முன்னதாக அங்கு நடைபெற்ற தொடக்க கூட்டத்துக்கு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தெட்சிணாமூர்த்தி தலைமை வகித்தார். இந்து முன்னணி ஒன்றிய தலைவர் ராஜேந்திரன் வரவேற்றார்.

அனைத்து கிராம கமிட்டி ஒருங்கினைப்பு குழுத் தலைவர் சிவபிரகாஷம், தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்ற கழக துணைத்தலைவர் ராம்பிரபு, இந்து முன்னணி மாவட்ட செயலாளர் நாடிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிதம்பரம் ராமஜெயம் அறக்கட்டளை நிறுவனர் ராமகிருஷ்ணன் ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.
இதில் சிறப்பு அழைப்பாளராகளாக பா.ஜ.க மாநில பொதுச்செயலாளர், கருப்பு முருகானந்தம், தென் இந்திய பார்வர்ட் ப்ளாக் கட்சி நிறுவனர் திருமாறன், இந்துமுன்னணி மாநில பேச்சாளர் பிரபாகரன், பாஜக மேலிட பார்வையாளர் பேட்டை சிவா, மாவட்ட துணைத்தலைவர் மாரிமுத்து ஆகியோர் பங்கேற்றனர்.
அதனைத் தொடர்ந்து விநாயகர் ஊர்வலம் புறப்பட்டது. ஊர்வலத்தில் உப்பூர், ஆலங்காடு, தில்லைவிளாகம், ஜாம்புவானோடை, அரமங்காடு, கோவிலூர், மருதங்காவெளி உட்பட 19பகுதிகளிலிருந்து விநாயகர் சிலைகள் எடுத்து வரப்பட்டன
ஜாம்புவானோடை வடக்காடு சிவன் கோவிலிருந்து புறப்பட்டு வைரவன் சோலை, ஜாம்புவானோடை தர்ஹா, மேலக்காடு, கோரை ஆற்றுபாலம் பகுதி வழியாக பதற்றம் நிறைந்த முத்துப்பேட்டை ஆசாத்நகர், திருத்துறைப்பூண்டி சாலை, பழைய பேருந்து நிலையம், பட்டுக்கோட்டை சாலையில் உள்ள நியூபஜார், கொய்யா முக்கம், பங்களாவாசல், ஓடக்கரை வழியாக செம்படவன்காடு சென்று அங்குள்ள பாமனி ஆற்றில் கரைக்கப்பட்டது.
இந்த ஊர்வலத்துக்காக கடந்த ஒரு வார காலமாக போலீசார் பல்வேறு பாதுகாப்பு பணிகளை செய்து வைத்தனர். ஆங்காங்கே கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டன. மேலும் கொடி அணிவகுப்பும் விநாயகர் ஊர்வலம் செல்லும் பாதையில் நடத்தப்பட்டது.
தொடர்ந்து நேற்று நடைபெற்ற ஊர்வலத்தின்போது, வஜ்ரா வாகனங்களும் விநாயகர் ஊர்வலத்தில் அணிவகுத்து வந்தன. திருச்சி மத்திய மண்டல ஐஜி சந்தோஷ் குமார் மேற்பார்வையில், திருச்சி டிஐஜி சரவணன், தஞ்சை டிஐஜி கயல்விழி ஆகியோரின் வழிகாட்டலில் திருவாரூர் எஸ்.பி.சுரேஷ்குமார் குமார் தலைமையில் இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
இந்த விநாயகர் ஊர்வல பாதுகாப்பு பணியில் திருச்சி, புதுக்கோட்டை, பெரும்பலூர், கரூர், மயிலாடுதுறை மாவட்டங்களை சேர்ந்த 9 எஸ்பிகள், 10 ஏடிஎஸ்பி, 37 டிஎஸ்பிகள், நூறுக்கும் மேற்பட்ட இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 3000 போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர்.
அதுபோல், மன்னார்குடி கோட்டாட்சியர் தலைமையில் வருவாய் துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டனர். விநாயகர் ஊர்வலம் செல்லும் பகுதியில் 110 இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு கண்காணிப்பும் தீவிர படுத்தப்பட்டிருந்தது. இந்த முறை லகூன் அலையாத்தி காடுகள் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்கவும் கண்காணிப்புகள் செய்யப்பட்டன.